நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
அதற்கான தலைவராக விஜய்யும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய புஸ்ஸி ஆனந்த், “ தளபதி விஜய் தலைவர் ஆகிவிட்டார்.
இனி ஒரே தலைவர்தான். எனவே மாவட்ட தலைவர்கள் இனி மாவட்டச் செயலாளர்கள் என அழைக்கப்படுவார்கள். நீங்கள் அனைவரும் 2026 தேர்தல் வெற்றிக்கு உண்மையாக உழைக்க வேண்டும். அது உங்கள் கையில் உள்ளது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகின்ற ஒரே தலைவர் விஜய்தான். ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் நிற்பதாகக் கருத வேண்டும். அவர் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார். ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும். உங்கள் பணியை முடித்துவிட்டு தினந்தோறும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும்.
2026 இல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும். அதற்கான சேவைகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.