கோவை அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வேலுமணி, “ஆ.ராசா முன்பு எடப்பாடியாரின் தாயாரை விமர்சித்தார். இன்று எம்ஜிஆரையும் விமர்சித்துள்ளார். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை கொண்டவர் எம்ஜிஆர். யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லாமல் தொடங்க முடியாது. தெய்வமாக உள்ள எம்ஜிஆரை மோசமான வார்த்தையை சொல்லி பேசியுள்ளார். இதற்கு தற்போது வரை திமுக தலைவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. எம்ஜிஆரை பெரியப்பா என மு.க ஸ்டாலின் சொல்லுவார்.
கருணாநிதி குடும்பம் கடனில் இருக்கும் போது படம் நடித்துக்கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார். மக்கள் நிச்சயம் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்து எடப்பாடியார் அவினாசிக்கு வருகிறார். லட்சகணக்கான தொண்டர்களை இதில் கலந்துகொள்ள உள்ளனர். நம் கோபத்தை காட்ட வேண்டிய இடம் அவினாசி. அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
அதிமுகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என கிளப்பி கொண்டே இருப்பார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். எடப்பாடியார் தெளிவாக இருக்கிறார். திமுகவுக்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை. அதிமுக-வில் இணைய இளைஞர்கள் கொத்துக் கொத்தாக வருகின்றனர். ஆனால் திமுக-வில் 85 வயதுக்கு மேல் இருப்பவர்களும், ரிட்டய்ர்டு ஆனவர்கள் தான் சேருகின்றனர்.
நம்முடைய பணிகளை விசுவாசமாக செய்ய வேண்டும். நமக்கு போட்டி திமுக மட்டும்தான். மற்றவர்கள் சும்மா எதாவது சொல்வார்கள். திமுக – பாஜக இடையே போட்டி என்றும் கூட சொல்வார்கள். கூட்டணியை பொதுச்செயலாளர் பார்த்துக் கொள்வார். கட்சியினர் சோர்வாகிவிடக் கூடாது. நமக்கு எதிரி திமுக மட்டுமே.” என்றார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “ராசா மற்றும் அவரை கண்டிக்காத திமுக தலைமையை கண்டித்து அவினாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமை தாங்குகிறார். 3 ஆண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதை தெருமுனை பிரசாரம் மூலம் கொண்டு செல்ல இருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதிகாரிகள் திமுக பொறுப்பாளர்களை போல செயல்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் எந்தத் திட்டமும் வரவில்லை. குடிநீர் பிரச்னை இருக்கிறது. மக்கள் பிரச்னைக்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY