உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் பெல்ஹாரா பஞ்சாயத்துத் தொகுதி இருக்கிறது. இந்தத் தொகுதி பெண்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில், ஷபானா காதுன் என்ற பெண் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் எந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, பஞ்சாயத்துத் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் அவரது மைத்துனர்தான் எடுக்கிறார்கள்.
அரசு ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காகக் கூட , ஆவணங்கள் ஷபானா காதுனின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல பதவிகளில், பெண் தலைவர்களின் கணவர்கள் மற்றும் பிற ஆண் உறவினர்கள் உண்மையான தலைவர்களைப் போன்று நடந்து கொள்வது பல காலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெல்ஹாரா பஞ்சாயத்துத் தொகுதியில், தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவர் அந்தப் பஞ்சாயத்துத் தலைவியான ஷபானா காதுன். ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை, அவரது புகைப்படம் பெயர் எதுவும் விளம்பரப் பதாகைகளில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, அவரது மைத்துனர் அயாஸ் கான் முன்னிலை வகித்தார். விளம்பரப் பலகைகளிலும் போஸ்டர்களிலும் அவரது புகைப்படம் இருந்தது. அதில் “தலைவர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் மடிக்கணினிகளை வழங்குவதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் பங்கேற்றிருந்தார்.
அவரிடம் பெண் பஞ்சாயத்துத் தலைவரைப் புறந்தள்ளிவிட்டு, ஆண்கள் முன்னிலை வகிப்பது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அகிலேஷ்,“இது என்ன புதிதா? இங்கே எவ்வளவு பெண் பொறுப்பாளர்களின் பிரதிநிதிகளாகக் கணவர்கள் இருக்கிறார்கள். இப்போது நான் கேட்கிறேன், செய்தியாளர்கள் ஏன் ஆண்களாக இருக்கிறீர்கள்…” எனக் கேள்வி எழுப்பினார். தற்போது இந்த விவகாரம் பேசுபொருளாயிருக்கிறது.