பா. ரஞ்சித் தயாரிப்பில், ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில் ரசிகர்களளைச் சந்திப்பதற்காக ‘ப்ளூ ஸ்டார்’ படக்குழுவினர் கோவை புரூக்ஃபீல்ட்ஸ் பிவிஆர் சினிமாஸிற்கு வந்திருந்தனர். அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு மற்றும் பிருத்வி ராஜன் ஆகியோரின் திடீர் விசிட் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. பின்னர், படக்குழுவினர் தியேட்டரில் இருந்த ரசிகர்களிடம் உரையாடி அவர்களுடைய விமர்சனஙகளைக் கேட்டறிந்தனர்.
ரசிகர்களிடம் பேசிய கீர்த்தி பாண்டியன், ” எனக்கும் என் கணவருக்கும் கோவை ரொம்பப் பிடிக்கும். ஏன்னா என்னோட கணவரோட ஊரும் கோயம்புத்தூரும் ரொம்பப் பக்கம். எங்களோட படத்திற்காக கோயம்புத்தூர் ரசிகர்களைச் சந்திப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நிச்சயமா ‘ப்ளூ ஸ்டார்’ உங்க எல்லாருக்கும் பிடிக்கும் என்று நம்புறோம். உங்களோட ஆதரவுக்கும் அன்புக்கும் ரொம்ப நன்றி.” என்றார்.
இதையடுத்துப் பேசிய படத்தின் நாயகன் அசோக் செல்வன், “என்னுடைய படங்கள் அனைத்தும் ரசிகர்களாகிய உங்களால் தான் பெரும் வெற்றியடைகிறது. நீங்கள் தரும் ஆதரவே என்னுடைய மிகப்பெரிய பலம். ஒவ்வொரு முறை என்னோட படம் ரிலீஸாகும் போதும் கோவை வந்து உங்க எல்லாரையும் பார்க்கணும் என்று நினைப்பேன். இப்போ ‘ப்ளூ ஸ்டார்’ வெளியாகிய ஒரு வாரத்துல உங்களைச் சந்திப்பதில் ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு எப்பவுமே கோயமுத்தூர் ரொம்பப் பிடிக்கும், என்னோட ஊர் தான். என்னோட படத்துக்கு நீங்க இவ்வளோ ஆதரவு தந்ததுக்கு ரொம்ப நன்றி” என்றார்
இதைத்தொடர்ந்து பேசிய சாந்தனு, “இப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே இவ்வளோ ஆதரவு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. நிறைய பேர் குடும்பத்தோட வந்திருக்கீங்க. அதைப் பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இது எங்க எல்லாருக்குமே ரொம்பத் தேவைப்பட்ட ஒரு வெற்றி. படம் பிடிச்சிருந்தா கண்டிப்பா உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்துல இருக்குறவங்களுக்குச் சொல்லுங்க. இனியும் தொடர்ந்து இதே மாதிரி எங்கள சப்போர்ட் பண்ணுங்க. உங்க எல்லாரையும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி” என்றார்.
சாம் கதாப்பாத்திரத்தில் நடித்த பிருத்வி ராஜன் பேசுகையில், “உங்க எல்லாருக்குமே ‘சாம்’ கதாப்பாத்திரம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து இதே மாதிரி எனக்கு உங்களோட ஆதரவைக் கொடுங்க” என்று நன்றி கூறினார்.