மத்திய பிரதேச மாநிலம் தீண்டோரி மாவட்டத்தில் உள்ள சஹ்புராவில்  பெண் துணைப் பிரிவு மாஜிஸ்ட்ரேட்(SDM) ஆக பணியாற்றி வந்தவர் நிஷா நபித். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு மணிஷ் சர்மா(45) என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் மெட்ரிமோனியல் இணைய தளத்தில் அறிமுகமாகி திருமணம் செய்து கொண்டனர். நிஷா தனது திருமணத்தை உறவினர்களுக்கு கூட தாமதமாகத்தான் சொன்னார். மணிஷ் சர்மாவிற்கு வேலை இல்லை. ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்து வந்தார். அதில் பெரிய அளவில் வருமானம் கிடையாது. இதனால் அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு சித்ரவதை செய்து வந்தார்.

இந்தநிலையில் தான் திடீரென நிஷாவை மணிஷ் சர்மா அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை சோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நிஷா சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இரவில் வாந்தி எடுத்ததாகவும், இதற்காக மருந்து எடுத்துக்கொண்டதாகவும், காலையில் எழுந்தரிக்கவில்லை என்றும் சொன்ன மணிஷ் சர்மா, `தான் வெளியில் சென்றுவிட்டு பிற்பகல் 2 மணிக்கு வந்த போதும் நிஷா உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. அவரை எழுப்ப முயன்றேன்.

ஆனால் முடியவில்லை. இதையடுத்து டாக்டரை அழைத்து காண்பித்த போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார்’ என்றார். நிஷாவின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது போன்று காண்பிக்க முயன்றார். ஆனால் மாஜிஸ்திரேட் மரணம் என்பதால் போலீஸார் சிறப்பு கவனம் எடுத்து விசாரித்தனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்களும் தெரிவித்தனர். நிஷாவின் மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வந்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதையே காட்டியது. இதையடுத்து நிஷாவின் வீட்டை போலீஸார் மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷினில் தலையணை உறை, பெட்சீட் மற்றும் நிஷாவின் உடைகள் இருந்தது.

அதோடு வீட்டில் இருந்த ரத்தக்கரையும் கழுவி விடப்பட்டு இருந்தது. இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸார் மீண்டும் மணிஷ் சர்மாவை அழைத்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் நிஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு எனது பெயரை நிஷா தான் வேலை செய்யும் இடத்தில் வாரிசாக நியமிக்க மறுத்துவிட்டார் என்றும், இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் வங்கி கணக்கிலும் வாரிசாக எனது பெயரை சேர்க்க மறுத்து வந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அவரை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

நிஷா

கொலை செய்த பிறகு நிஷாவின் ரத்தக்கரை படிந்த ஆடைகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டு துவைத்ததாக தெரிவித்துள்ளார். அதோடு கொலை செய்த பிறகு நிஷாவின் உடலோடு 6 மணி நேரம் இருந்து விட்டு அதன் பிறகுதான் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி அகில் பட்டேல் கூறுகையில், ”51 வயதாகும் நிஷா மணிஷ் சர்மாவை மெட்ரிமோனியல் தளத்தில் பார்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் நிஷா தான் வேலை செய்யும் இடத்திலும், வங்கி கணக்கு மற்றும் இன்சூரன்ஸ் பாலிசியில் மணிஷ் சர்மாவை வாரிசாக நியமிக்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது போன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிஷ் நிஷாவை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை 24 மணி நேரத்தில் தீர்த்து வைத்த விசாரணைக் குழுவை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) முகேஷ் ஸ்ரீவஸ்தவா பாராட்டி, ₹ 20,000  பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.