குழந்தைகள் சிறார் வதைக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் உறவினர்கள் மற்றும் மிகவும் நெருக்கமான நபர்கள் இந்தக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், அதிகமான குழந்தைளுக்கு நேரும் சிறார் வதைகள் வெளியில் வராமல் மறைக்கப்பட்டன. என்றாலும், இப்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக அது போன்ற வழக்குகள் அதிக அளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அப்படியாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், பதிவுக்கு வந்த குழந்தைகள் சிறார் வதை சம்பவங்கள் 96% அதிகரித்து இருக்கின்றன.
இது குறித்து என்.சி.ஆர்.பி தரவுகளை ஆய்வு செய்த ’க்ரை’ (CRY) தொண்டு நிறுவனம், அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”மக்களிடம் ஏற்பட்டு இருக்கும் விழிப்புணர்வு காரணமாக குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் அதிக அளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. புகார் செய்வதற்கான வழிகள் அதிகரித்து இருக்கின்றன.
குறிப்பாக, ஹெல்ப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் உடனே புகார் செய்ய முடிகிறது. அதோடு, விசாரணை ஏஜென்சிகளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் புகார் செய்ய ஊக்கம் கொடுக்கின்றனர்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் கொடுத்திருக்கும் தகவலின் படி 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குற்றங்களின் பதிவு 96% அதிகரித்து இருக்கிறது. 2021-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை மட்டும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வழக்குகள் 6.9% அதிகரித்து இருக்கிறது. 2021-ம் ஆண்டு இது 36,381 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
அதேசமயம், 2016-வது ஆண்டில் இந்தப் பாலியல் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 19,765ஆக இருந்து. 2017-ம் ஆண்டு இது 27,616 ஆகவும், 2018-ம் ஆண்டு இது 30,917ஆகவும் இருந்தது. 2019-ம் ஆண்டில் 31,132 ஆகவும், 2020-ம் ஆண்டு இது 30,705 ஆகவும் பதிவாகி இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 2020-ம் ஆண்டில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் குறைந்து இருந்தது.
இது குறித்து ‘க்ரை’ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுபந்து பட்டாச்சாரியா கூறுகையில், ”குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தும் விதமாக சமீபத்திய சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் இருக்கிறது.
இதுபோன்ற சாதகமான சூழ்நிலை இருந்தபோதிலும், சிறப்பான விசாரணை, வழக்குகளை கையாள்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதில் இன்னும் சவால் இருந்து கொண்டுதான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஆந்திராவில்தான் அதிக அளவில் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன.