ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹீரோத் பட்டேல் என்ற இளைஞர்புதிய விவசாய முறையை திறம்பட செய்து வருகிறார். இவரின் பண்ணை குட்டையில் தனித்துவமான பந்தல் அமைப்போடு விவசாயம் செய்துவருகிறார். பிற விவசாயிகளுக்கும் வேளாண் விஞ்ஞானிகளுக்கும் இது ஆய்வுகூடமாக திகழ்கின்றது. இதனால் பலரும் இந்த பண்ணையை ஆர்வத்துடன் காண வருகின்றனர்.

இளம் விவசாயியான ஹீரோத் குட்டையில் காய்கறிகளை பயிரிடுகிறார். நம்மைப் போல் தரையில் இல்லை தண்ணீரில்.. அதாவது அவர் குளத்து தண்ணீரின் மேல் புதிய வகை பந்தல் அமைத்து நீரின் மேல் நார்களை அடுக்கி அதில் பயிர் செய்கிறார்.

குளத்தில் விவசாயம் செய்யும் ஹீரோத் பட்டேல்

எட்டு வருடத்திற்கு முன், இவருடைய தந்தையான சிவசங்கர் குடும்பத்தோடு பாரம்பரிய முறை விவசாயத்திலேயே ஈடுபட்டு வந்துள்ளார். அதில், அதிக உழைப்பு இருந்தாலும் குறைந்த வருமானமே கிடைத்தது. இதனால், புதிய அணுகுமுறைகளை கண்டுபிடித்து நிறைந்த லாபம் பெற வேண்டுமென ஹீரோத் நினைத்தார்.

ஹீரோத் 2019-ல் ஒடிசா வேளாண்துறையின் நீர்நிலை மேலாண்மை மற்றும் மண்வள பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தனது பத்து ஏக்கர் நிலத்தில் நான்கு குளங்களை வெட்டினார். நிலத்தை திறம்பட உபயோகிக்க குளத்தைச் சுற்றி கரை முழுதும் வாழை, கொய்யா, தென்னை முதலான மரக்கன்றுகளை நட்டினார். இதனுடன் குட்டையில் ரோகு, மிருகால், கட்லா முதலிய மீன்களையும் வளர்த்து வருகிறார்.

குளத்தில் கொடி காய்கறிகள் வளர்ப்பதால் நீர் பாய்ச்ச தேவையில்லை . மேலும், மீன் கழிவுகள் உரமாக அமைவதால் உர தேவையும் மிகக் குறைவு.

குளத்தில் பந்தல் அமைத்ததெல்லாம் சரி. செடி பராமரிப்பு எப்படி செய்வது? காய்களை எவ்வாறு அறுவடை செய்வது குளத்தில் நீச்சல் அடித்தா? நீச்சல் அடித்து சென்றாலும் எவ்வாறு காய்களை பறிப்பது கொடியோ உயரமாக தானே இருக்கும்? இதற்கெல்லாம் ஒரு தீர்வு அவரிடம் இருந்தது.. பகுதி நேரமாக எலக்ட்ரிஷன் பணி செய்துவரும் இவர், எண்ணெய் ட்ரம்களை பயன்படுத்தி ஒரு படகை வடிவமைத்துள்ளார். அதன் மூலம் குளத்தில் வெற்றிகரமாக அறுவடை செய்து வருகிறார் ஹீரோத்.

குளத்தில் விவசாயம் செய்யும் ஹீரோத் பட்டேல்

” நிலத்தில் மூங்கில் பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி செய்தோம். அப்பொழுது, குளத்தின் மேல் பந்தலிட்டு ஏன் கொடி காய்கறிகள் விளைவிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக 120 சுரைச் செடிகள் நட்டு 1800 காய்கள் கடந்த செப்டம்பரில் அறுவடை செய்தோம். இதன் மூலம் கூடுதல் வருமானமாக ரூபாய் 35 ஆயிரம் கிடைத்தது” எனக்கூறி புன்னகைத்தார் ஹீரோத்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.