திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள் கைது!
பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மற்றும் மருமகள் மர்லினா ஆகியோரைக் கைதுசெய்தது காவல்துறை. ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
திருப்பூர்: செய்தியாளர் மீது தாக்குதல் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
திருப்பூரில் தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு என்பவர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்திருக்கிறார். மேலும், முன்கூட்டியே தகவல் தெரிவித்தும், பாதுகாப்பு வழங்காத காவல் ஆய்வாளரைக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றியும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
இன்று இந்தியா வருகிறார் இமானுவேல் மேக்ரான்!
இந்தியாவில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டு நாள் இந்திய பயணமாக இமானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறார். பின்னர் அங்கிருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இருவரும் பயணிக்க உள்ளனர். அதன் பின்னர் இன்று இரவு டெல்லி செல்கிறார்கள். அங்கு நாளை குடியரசு தின விழாவில் பங்கேற்பதோடு குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்திலும் பங்கேற்ற உள்ளார்.