அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, மும்பையில் நேற்று ராமர் பக்தர்கள் ஆங்காங்கே ஊர்வலம் நடத்தினர். மும்பை அருகில் உள்ள மீரா ரோடு பகுதியில் இருக்கும் நயா நகரில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில், இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் விஷமிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 4 கார்கள், 10 மோட்டார் சைக்கிகள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

அதில் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து நயா நகரில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மிரா பயந்தரில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸார் கொலை முயற்சி மற்றும் வன்முறை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, 13 பேரை கைதுசெய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார். இரு தரப்பினரும் மோதிக்கொண்ட வீடியோ, சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக நயா நகர் பகுதியில் புல்டோசர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. 15 சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். நயா நகர் பகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அப்பகுதி `சோட்டா காஷ்மீர்’ என்று அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக புல்டோசர் மூலம் நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கலாசாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்த கலாசாரம் மகாராஷ்டிராவிலும் வந்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.