மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்வு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய இவ்விழாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தி அவரின் நினைவுகள் குறித்து மனம் திறந்து பேசினர்.
இந்நிலையில் இவ்விழாவில் பேசிய நடிகர் விஷால், “எங்க சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில் வாழும் மனிதனாகவும், கேப்டன் விஜயகாந்த் ரசிகராகவும் இவருடைய நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராகவும், தே.மு.தி.க கட்சிக்கு வாக்களித்த வாக்காளராகவும் இருப்பதில் மகிழ்ச்சி.
அவர் வாழும் போதே கடவுளாக இருந்தவர். கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அசிஸ்டென்ட் டைரக்டர்கள் எல்லாரும் விஜயகாந்த் ஆபிஸூக்குப் போனா சாப்பாடு கிடைக்கும்னு போய் சாப்பிடுவாங்க. எங்கள மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர் அவர். இறப்பின் போது நான் ஊர்ல இருந்திருக்கணும். அதுக்காக அவருடைய குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் உங்க வீட்டுப் பிள்ளையா சொல்றேன்…” என்றவர் கேப்டனின் மகனை நோக்கி, “அப்பா மாதிரி நீ பெரிய ஆளா வரணும். அவர் எதுக்கும் பயப்படாம பேசுவார். எப்போதும் எல்லாருடைய மனசுலேயும் விஜயகாந்த் இருப்பார்.
தமிழ்நாடு ஒரு தலைவனை மிஸ் பண்ணிருச்சு. அவர் நடிகர் சங்கத்தை மீட்டு ஒரு குடும்பமாகக் கொண்டு வந்தார். இங்கே பேசுன எல்லாரும் மனதாரப் பேசினாங்க. கேப்டன் எல்லாரையும் சமமா பார்த்தார். ஈகோ இல்லாமல் இருந்தார். 54 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்.
இந்தியாவில் இவர் பண்ணின சாதனைகளை யாரும் பண்ணியதில்லை. எல்லா நடிகரையும் தயாரிப்பாளரையும் சமமாக வளர வைத்தவர். எந்தச் சங்கத்திலும் இவர் மேல எந்தப் புகாரும் இருந்தது இல்ல. பிரேமலதா மற்றும் சுதிப் சாருக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். எல்லா சங்க உறுப்பினர்களும் உங்க கேப்டனுக்காகதான் வந்திருக்காங்க. அவருடைய பசங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். அம்மாவுடைய ஆரோக்கியத்தை பார்த்துக்கோங்க” என்று பேசியுள்ளார்.