`காதலுக்குக் கண்ணில்லை’ என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதே போன்று காதலிக்காக எதையும் செய்யக்கூடிய காதலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஒரு வாலிபர் தனது காதலிக்காக அவரைப் போன்று உடையணிந்து தேர்வு எழுதச்சென்று பிடிபட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் பரித்கோட் என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள கோட்காபுரா என்ற இடத்தில் பள்ளியொன்றில் சுகாதாரப் பணியாளர்களைத் தேர்வு செய்யத் தேர்வு நடத்தப்பட்டது. பரம்ஜித் கவுர் என்ற பெண்ணும் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அவருக்குத் தேர்வு எழுதப் பயமாக இருந்தது. உடனே தனது காதலனிடம் இதைத் தெரிவித்திருக்கிறார். அவரது காதலன் ஆங்கிரேஷ் சிங், தனது காதலிக்காக தானே தேர்வை எழுத முடிவு செய்தார். காதலியைப் போன்று உடையணிந்து தேர்வு எழுதவும் சென்றுவிட்டார். சிவப்பு வளையல் போட்டு, பொட்டு வைத்து, லிப்ஸ்டிக் அடித்துத் தேர்வு நடக்கும் மையத்திற்குச் சென்றுள்ளார்.

காதலியாக சிங்

ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் கூட தனக்கேற்றவாறு முறைகேடும் செய்துவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் சிக்கிக்கொண்டார்.

எப்படி என்றால், தேர்வு எழுதச் செல்லும் முன்பாக தேர்வு எழுத வந்தவர்களின் கைரேகையையும் (பயோமெட்ரிக்) சோதித்து உள்ளே அனுப்பியிருக்கின்றனர். சிங்கின் கைரேகையை ஒப்பிட்டுப் பார்த்தபோது பரம்ஜித் கவுர் கைரேகையோடு ஒத்துப்போகவில்லை. இதனால் சிங்கின் சாயம் வெளுத்துப்போனது.

அவரை பிடித்துச்சென்று விசாரித்த போது அதிகாரிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அதோடு அவர் ஆண் என்பதை அறிந்து மேலும் ஆச்சரியம் அடைந்தனர். அவரை அதிகாரிகள் போலிஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் பரம்ஜித் கவுரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.