சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 2015-ல் ஒரு நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் திருமண முறையில் தன்னோடு வந்த பெண்ணோடு பெற்றோரின் முன்னிலையில் அந்த நபர் திருமணம் செய்துள்ளார்.
இந்த எஃப்ஐஆரை அப்பெண்ணின் அப்பா பதிவு செய்துள்ளார். போலீஸார் அவர்களைக் கண்டுபிடிக்கையில் அப்பெண் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வரனா காந்தா ஷர்மாவின் கீழ் விசாரணைக்கு வந்தது. விருப்பப்பட்டு தன்னுடைய கணவரோடு சென்றதாகவும் அந்தச் சமயத்தில் தனக்கு 18 வயதாகி இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 9 வருடங்களாகின்றன. இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். குடும்பத்தை இதுவரையில் இவர்கள் மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
வழக்கின் நிலை குறித்து ஆராய்ந்த நீதிமன்றம், “ஒருவர் அல்லது இருவருமே மைனராக இருக்கலாம் அல்லது மைனராக உள்ள வயது விளிம்பில் இருக்கக் கூடிய இரண்டு இளம் பருவத்தினருக்கு இடையேயான உண்மையான காதலை கடுமையான சட்டம் அல்லது அரசு நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த முடியாது.
நீதித்துறை அமைப்பு சட்டத்தை விளக்குவது மற்றும் நிலைநிறுத்துவது மட்டுமல்லமால், சமூகத்தின் இயக்கவியலையும் புரிந்துகொள்ள வேண்டும்.
எஃப்.ஐ.ஆர் ரத்து செய்யப்படாவிட்டால், அது தம்பதியரின் இரண்டு மகள்களின் எதிர்காலத்தை பாதிக்கும் மற்றும் உண்மையான நீதி தோற்றுப்போக வழிவகுக்கும்.
சட்டத்தை எப்போதும் கணித முறையில் மட்டுமே பார்க்க முடியாது. சில சமயங்களில், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் போன்ற பிற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சில சமயங்களில் தராசின் ஒரு பக்கம் சட்டத்தைக் கொண்டிருக்கும் போது, மறுபக்கம் குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என முழு வாழ்க்கையையும் சுமந்து செல்லும்” என்று நீதிமன்றம் கூறி அந்நபர் மீதான வழக்கை ரத்து செய்தது.