கோச்சிங் சென்டர்கள் வீதி வீதிக்கு முளைத்துள்ளன. நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என அனைத்திற்கும் மாணவர்கள் கோச்சிங் சென்டர்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.
மறுபுறம் கோச்சிங் சென்டர்கள் மாணவர்களை தங்கள் பக்கம் வரவைக்கப் பல வகையில் பொய்யான விளம்பரங்களையும் வெளியிடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) வரைவு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு தவறான விளம்பரங்களை வெளியிட்ட 31 கோச்சிங் சென்டர்களுக்கு சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியது. 9 கோச்சிங் சென்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோச்சிங் சென்டர்களில் `100% வேலை உத்தரவாதம்’ மற்றும் ஏமாற்றும் நடைமுறைகளைத் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்து கோச்சிங் சென்டர்களுக்கும் பொருந்தும்.
வழிகாட்டுதலின்படி, படிப்புகள் தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் விண்ணப்பதாரர்களின் வெற்றி விகிதம் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
கோச்சிங் சென்டர்கள் தாங்கள் கற்பிக்கும் படிப்புகள் குறித்த முக்கிய விவரங்களைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். அதோடு அப்பயிற்சி கட்டணத்துக்குட்பட்டதா அல்லது இலவசமாக வழங்கப்படுகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நுகர்வோரின் தவறான புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும் எந்த நடைமுறைகளுக்கும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 100% வேலை அல்லது செலக்ஷன் போன்ற உத்தரவாதங்களை அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதல்கள் குறித்த விவாதங்கள் இன்னும் நடைபெற்று வருவதால், வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.