குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு!
நீலகிரியில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் முன் விடுதலை நேற்று உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், “சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை – நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.
“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன. நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.” என குறிப்பிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி. வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்; சென்னையில் பேருந்து இயக்கம்: இடம்: சென்னை கோயம்பேடு
வேலை நிறுத்தம்… கோவை நிலவரம்..!
கோவை மாவட்டத்தில் காலை நிலவரப்படி பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. பெரும்பாலான பேருந்துகளில், ‘இன்று பேருந்துகள் வழக்கம் போல இயங்கும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘விடுப்பில் இருந்தவர்கள்.. மதியம் ஷிப்டில் இருந்தவர்களை எல்லாம் அழைத்து காலை பேருந்து இயக்க சொல்லியுள்ளனர். அதனால் இப்போது எதுவும் தெரியாது. மதியத்துக்கு பிறகே பிரச்னை தெரியும். முக்கியமாக மாலை வீடு திரும்பும்போது மக்கள் சிரமங்களை சந்திக்கலாம்.’ என்றனர்.
சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்!
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடங்கியது!
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தனர். ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதுவும் தோல்வியில் முடிந்ததால், நேற்று நள்ளிரவு முதலே வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
இதனால் இன்று குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படும் நிலை உள்ளது. அதே நேரம் பணிமனை, பேருந்து நிலையங்களில் பணிக்கு வரும் ஊழியர்களை தடுத்தாலோ, மக்களுக்கு இடையூறு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். இதனை கண்காணிக்க போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் போலீஸார் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தேவையான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா என்பது சந்தேகம் தான். இந்த போராட்டத்தில் தொமுச பங்கேற்கவில்லை, மக்கள் நலன் கருதி ஐஎன்டியூசி-யும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேருந்துகளை சுமூகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.