கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களெங்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும், ராஷ்மிகா மந்தனாவிற்கும் வரும் பிப்ரவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படம் 850 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ள உற்சாகத்தில் இருந்த ராஷ்மிகா குறித்து, இப்படி ஒரு தகவல் பரவி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தின் மூலம் பான் இண்டியா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் அறிமுகமானார். விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம்தான் ராஷ்மிகாவிற்கு தெலுங்கில் இரண்டாவது படம் (முதல் படம் ‘சலோ’).
இளமை துள்ளும் காதல் கதையான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரின் லவ் கெமிஸ்ட்ரி ரொம்பவே பேசப்பட்டது. அந்தப் படத்தின் விமர்சனங்களில்கூட, ”சூழ்நிலைகளால் கீதாவின் கண்களுக்கு ஜொள்ளு பார்ட்டியாகவே காட்சியளிக்கிறார் கோவிந்த். விஜய் தேவரக்கொண்டா `மேடம் மேடம்’ என உருகும் காட்சிகளில் `அர்ஜுன் ரெட்டி’ ஹீரோவா இவர் எனக் கேட்கத் தோன்றும். தெலுங்கில் அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தனா, கண்களாலேயே அதட்டி, நடிப்பால் அரெஸ்ட் செய்கிறார். கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது… என இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தின் இறுதிவரை ரசிக்க வைக்கிறது” எனப் பலரும் வியந்து சொல்லிவிட, இந்த ஜோடி ‘டியர் காம்ரேட்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. அதன்பின் விஜய் தேவரகொண்டாவின் குட்புக்கில் ராஷ்மிகா இடம் பிடித்தார். அப்போதிருந்தே இருவருக்கும் காதல் என கிசுகிசு ஓடிக்கொண்டிருக்கிறது.
‘நேஷனல் க்ரெஷ்’ ஆகக் கொண்டாடப்படும் ராஷ்மிகா, இப்போது ‘புஷ்பா 2’வில் நடித்து வருகிறார். ‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி.. ‘ பாடல் இன்னமும் பலரது ஆல்டைம் ஃபேவரைட். இதனையடுத்து ‘ரெயின் போ’ என்ற பான் இண்டியா ஹீரோயின் சென்ட்ரிக் படம் உருவாகி வருகிறது. தவிர சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் ராஷ்மிகாவை நடிக்க வைக்கப் பேசி வருகிறார்கள். தெலுங்கில் ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம் குறித்து அவரது டோலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
”ராஷ்மிகா, பாலிவுட்டில் ‘அனிமல்’ படத்திற்கு முன்னர் ‘குட் பை’, ‘மிஷன் மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவை போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் ‘அனிமல்’ படம் ராஷ்மிகாவிற்கு பாலிவுட்டில் சிவப்புக் கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. இதனால் ‘புஷ்பா 2’விலும் ராஷ்மிகாவின் போர்ஷனை அதிகப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே ‘ரெயின்போ’ என்ற படமும் கைவசம் உள்ளது. இப்படி பிஸியாக இருக்கும் சமயத்தில் ராஷ்மிகா
திருமணம் செய்துகொள்ள மாட்டார். அவரது திருமணத்திற்கு இன்னும் சில ஆண்டுகளாவது ஆகலாம். எனவே நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் உண்மையாக இருக்காது. ராஷ்மிகாவைப் பொறுத்தவரையில் மனதில் பட்டதைப் பட்டென்று பேசிவிடுபவர். திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற முக்கியமான தகவல்களை அவர் மறைக்க மாட்டார். இன்ஸ்டாவில் கூட தெரியப்படுத்திவிடுவார். ஆகவே அவரது நிச்சயதார்த்த தகவல் அவரது போட்டியாளர்கள் கிளப்பிவிட்ட வதந்தியாகத்தான் இருக்கும்” என்கிறார்கள்.