பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருக்கிறான். லாரன்ஸ் தற்போது பஞ்சாப் பாடகர் கொலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தனது கூட்டாளிகள் மூலம் சல்மான் கானுக்கு ஏற்கெனவே பல முறை கொலை மிரட்டல் விடுத்துள்ள லாரன்ஸ் பிஷ்னோய், வேறு பல குற்றச்செயல்களிலும் ஈடுபட்டுள்ளான். லாரன்ஸ் கொலை மிரட்டலைத் தொடர்ந்து, சல்மான் கானுக்கு மும்பை போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

அதோடு சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் நவிமும்பையில் இருக்கும் பன்வெல் என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்று இருக்கிறது. இந்தப் பண்ணை வீட்டிற்கு அடிக்கடி சல்மான் கான் வருவது வழக்கம்.

சல்மான் கான்

தனது பிறந்தநாளையே சல்மான் கான் இந்தப் பண்ணை வீட்டில்தான் கொண்டாடுவார். ஆனால் கொலை மிரட்டல் சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு வருவதை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளார். தனது பிறந்தநாளைக்கூட இம்முறை பண்ணை வீட்டில் கொண்டாடவில்லை. இந்த நிலையில், சல்மான் கானின் பண்ணை வீட்டிற்குள் இரண்டு பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.

போலீஸ்

போலி ஆதார் கார்டுடன் அவர்கள் மரத்தில் ஏறி, அங்கிருந்து பண்ணை வீட்டிற்குள் குதிக்க முயன்றனர். அவர்கள் இரண்டு பேரையும் பண்ணை வீட்டு பாதுகாவலர்கள் பிடித்துவிட்டனர். அவர்களது பெயர் அஜேஷ் குமார், குருசேவக் சிங் என்று தெரியவந்துள்ளது. இருவருக்கும் 23 வயதாகிறது. பஞ்சாப் மாநிலம், மாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள் இரண்டு பேரையும், பண்ணையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொய்யான தகவலைக் குறிப்பிட்டனர். இரண்டு பேரையும் பண்ணை வீட்டு மேலாளர் சசிகாந்த், போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் இரண்டு பேரிடமும் விசாரித்து வருகின்றனர். அவர்களது ஆதார் கார்டில் இருந்தது போலி புகைப்படம் என்று தெரியவந்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.