`தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு!’ – ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு
“தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்த ஹூண்டாய் நிறுவனம், தற்போது கூடுதலாக 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் நீண்டகால தொழில் தொடர்பு உள்ளது.’ – ஹூண்டாய் இந்திய நிர்வாக அதிகாரி
“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு!” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் முதலிடத்திலும் இருக்கிறது. தமிழ்நாடு 45,000 தொழிர்சாலைகளுடன் உற்பத்தி மையமாகத் திகழ்கிறது. ஆட்டோ மொபைல், மின்வாகனம், டயர் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பொறுத்தவரையில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 30 சதவிகிதம். தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டின் முதலிடத்தில் இருக்கிறோம். இந்தியாவில் வேலைக்கு செல்லும் மொத்த பெண்களில் தமிழ்நாட்டில் மட்டும் 43 சதவிகிதம். கல்வி மற்றும் மருத்துவத்தில் நாட்டில் முன்னணியில் இருக்கிறோம். தமிழ்நாடு, ஒவ்வொரு 250 பேருக்கும் ஒரு மருத்துவரைக் கொண்டிருக்கிறது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இன்ஜினீயர்களை உருவாக்குகிறோம். இந்தியாவின் டாப் 100 கல்லூரிகளில் 22 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
நந்தனம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Tamil Nadu Global Investors Meet: உலக முதலீட்டாளர்கள் மாநாடு… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
உலக அளவில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் நோக்கத்துடன், முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்குடன், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது.
இந்த தொடக்க விழா தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெறவிருக்கிறது. இன்று காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றவிருக்கிறார். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும், 30,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல இந்த மாநாட்டின் கருத்தரங்கில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களின் அடிப்படையில், ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.