சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியது! 

சென்னை YMCA விளையாட்டு மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் கண்காட்சியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இன்று முதல் 21-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். வார நாள்களில் பிற்பகல் 2 மணி வரை இரவு 8:30 மணி வரையும், வார இறுதி நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.

பொன்முடி: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு!

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். அந்த தண்டனையை எதிர்த்து, பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

அதானி குறித்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை: `செபியே விசாரிக்கும்..!’

அதானி

அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பெரும் பேசுபொருளாகியிருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளின் விசாரணை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் குவிந்த மனுக்கள் மீதான வாதங்கள், கடந்த நவம்பரில் முடிந்து தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த வழக்கில், “தனி விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு, ஹிண்டன்பர்க் அல்லது வேறு எந்தவொரு அறிக்கையும் அடிப்படையாக இருக்க முடியாது. அதேசமயம், அதானி குழுமத்துக்கு எதிராக மீதமிருக்கும் இரண்டு வழக்குகளின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் செபி (SEBI) முடிக்கவேண்டும்” என இன்று தீர்ப்பளித்திருக்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு – அறிவித்தது தமிழக அரசு!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுகரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

இம்மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதோடு ரூ.1,000 ரொக்கத்தையும் அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.