தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார்.
72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள அவரின் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மறைவால் ஓட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்து போய் இருந்தது.
இந்நிலையில் விஜயகாந்தின் இரண்டாவது மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
“உங்களின் இதயபூர்வமான இரங்கலுக்கு எங்களின் நன்றிகள்! ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்த நேரில் வந்திருந்தனர்; சாலைகளிலும் பாலங்களிலும் காத்திருந்தனர்.
மக்களின் இந்த ஆதரவு அனைத்துமே எங்களின் தந்தை எப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதையும், எத்தகையதொரு அன்பைச் சம்பாதித்திருக்கிறார் என்பதையும் எடுத்துரைக்கின்றன. இந்த இழப்பிலிருந்து நாங்கள் மீண்டு வரும் இந்தக் கடுமையான நேரத்தில் உங்களின் இந்த ஆதரவு, எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலை அளிக்கிறது” என்று அதில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.