தமிழ்நாட்டு பள்ளிகளில் நிலவி வரும் சாதியப் பாகுபாடுகள் குறித்து கள ஆய்வு செய்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ், தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் வெளியிட்டுள்ள கள ஆய்வு அறிக்கையில், “சமூக சீர்திருத்த இயக்கங்களின் மாபெரும் பங்களிப்புகளால் மாற்றங்களைக் கண்ட தமிழ்நாட்டில் வெளிப்பட்ட கல்வி நிலையப் பாகுபாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பிளேடால் முதுகில் கீறியது, சாதிக் கயிறு பிரச்னையில் தாக்குதல், மரணம், வீடு புகுந்து தாக்குதல், சண்டையை விலக்கி விட்டவர் மீது தாக்குதல், அம்பேத்கர் படத்தை செல்போனில் வைத்ததற்கு தாக்குதல், கபடி விளையாடும்போது கால் பட்டதற்கு தாக்குதல், பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணுடன் பேசியதற்கு தாக்குதல் என கொடூரமான நிகழ்வுகள் நடந்துள்ளன.
சாதிக் கயிறு, திலகம் கூடாது என 2019-ல் அன்றைய அரசு ஒரு சுற்றறிக்கை விடுத்தபோது அதுவெல்லாம் மத நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்டவை, அரசு தடுக்கக் கூடாது என பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தது. அந்த சுற்றறிக்கை விடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தது, அன்றைய அ.தி.மு.க அரசும் பின் வாங்கியது.
இந்த நிலையில், பள்ளிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் குறித்த கள ஆய்வை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 3 மாதங்களாக தமிழ்நாட்டின் 36 மாவட்டங்களில் நடத்தியுள்ளது. 250 கள ஆய்வாளர்களுக்கு பயிற்சி தந்து 321 அரசுப் பள்ளிகள், 58 அரசு உதவி பெறும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் என 441 பள்ளிகளை சேர்ந்த 644 மாணவர்கள் மத்தியில் கள ஆய்வை நடத்தியுள்ளது.
644 மாணவர்களில் 6 – 8 வகுப்பு – 152 பேர், 9- 10 வகுப்பு – 219 பேர், 11 -12 வகுப்பு 273 பேர் ஆவர். பாலின அடிப்படையில் ஆண்கள் 333, பெண்கள் 311 பேர். சாதிப் பிரிவினர் எனில் எஸ்.சி 438, எஸ்.சி (ஏ) 68, எம்.பி.சி 46, பிசி 41, எஸ்.டி 19, முற்பட்டோர் 1. சிலர் விவரம் தரவில்லை. இதில், இந்துக்கள் 532, கிறித்தவர் 22, இஸ்லாமியர் 9. மதம் சிலர் குறிப்பிடவில்லை. விவரம் தெரிவித்த மாணவர்களில் 70 சதவிகிதம் பேர் நிலமற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சொந்த வீடு இல்லாதவர்கள் 30 சதவிகிதம் பேர். சொந்த வீடு உள்ளவர்களில் 50 சதவிகிதம் பேர் ஓட்டு வீடு, குடிசைகளில் வாழ்பவர்கள். ஆய்வுக்கான கேள்வித்தாளில் 78 விவரங்கள் கேட்கப்பட்டன.
சாதிக்கென்று நிறத்தை கட்டமைத்து கயிறு, பொட்டு, டாலர், செயின், கடுக்கன், தொப்பி என அடையாளங்களுடன் பள்ளிகளுக்கு வருவதும், சாதி அடையாளத்துடன் தலைவர்கள் படத்தை பஸ் பாசுக்குள் வைத்து வருவது, டீ சர்ட்டுகள், பனியன்கள் சாதி அடையாளத்துடன் அமைவது என்பதும் உள்ளது. பதின் பருவத்தில் இயல்பாக ஏற்படும் சீண்டலுக்கான உந்தல் சாதிச் சீண்டலாக மடை மாற்றம் ஆகியுள்ளன. தேர்தல்களின் வாக்கு வங்கி அரசியலும் சமூகம், குடும்பம் என ஊடுருவி பள்ளிகள் வரை நீள்கின்றன.
கள ஆய்வு விவரங்கள் :
1.தலித் மாணவர்கள் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : தூத்துக்குடி -1, சிவகங்கை-1, சேலம்-1, விருதுநகர்-1,கடலூர்-1, மயிலாடுதுறை-1, தென்சென்னை-1, நெல்லை-1, கோவை-1, ராமநாதபுரம் மாவட்டத்தில்- 4.
2. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் முதலிடம் வரும் மாணவர்கள் தலித்துகளாக இருந்தால் விளம்பரப்படுத்தாத ஒரு பள்ளி மதுரை புறநகரில் உள்ளது.
3. உணவு சமைக்க பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத ஒரு பள்ளி மதுரை புறநகரில் உள்ளது.
3. உணவு சமைக்க பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத ஒரு பள்ளி மதுரை புறநகரில் உள்ளது.
4. சாதி வாரியாக சத்துணவுக்கு தனி வரிசையுள்ள பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : செங்கல்பட்டு -2, சேலம் -1, கடலூர் -3.
5. சக மாணவர்களிடம் சாதிய உணர்வை வெளிப்படுத்தும் மாணவர்கள் உள்ள பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : நெல்லை -3, ராமநாதபுரம் -4, மதுரை மாநகர்-1, புறநகர்-1, செங்கல்பட்டு-1, தூத்துக்குடி-1, அரியலூர்-1,தஞ்சை-1, வடசென்னை-2, திருப்பூர்-2, கடலூர்-2,தென் சென்னை- 2.
6. சாதி ரீதியாக குழுக்களாக மாணவர்கள் பிரிந்திருக்கும் பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : விருதுநகர்- 3, திருப்பூர் -3, மதுரை புறநகர் -2, கடலூர்-1, திண்டுக்கல்-1.
7.தனித்தனி அறைகளில் மாணவர்கள் உணவு அருந்தும் பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : திருவண்ணாமலை-1, திண்டுக்கல்-1, தர்மபுரி-1, கடலூர்-1.
8.பள்ளி சுவர்களில் சாதி பெயர்களை எழுதியிருக்கும் பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : தூத்துக்குடி-1, கடலூர்-1,விழுப்புரம்- 1.
9. ஆசிரியர்களுக்குள் சாதிப்பாகுபாடு உள்ள பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : திருவண்ணாமலை -2, தென்சென்னை -1.
10. தலித் மாணவர்களை ஆசிரியர்கள் தொட்டுப்பேசாத ஒரு பள்ளி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
11.தண்ணீர் குடிப்பதற்கு ஒரே டம்ளர் இல்லாத பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : நெல்லை 5, கடலூர் 3, மதுரை புறநகர்-2, கோவை-2, ராமநாதபுரம்- 2, திருச்சி புறநகர்-1, கள்ளக்குறிச்சி-1, மயிலாடுதுறை -1
12. தவறு செய்யும்போது தலித் மாணவர்களுக்கு கூடுதல் தண்டனை தரும் பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : திருவண்னாமலை-1, தூத்துக்குடி-1, தருமபுரி-1.
13. ஆசிரியரே மாணவர்களை சாதியாக பாகுபடுத்தும் பள்ளிகள் உள்ள மாவட்டங்கள் : கடலூர்-3, தருமபுரி-1, தென்காசி-1.
இதுபோன்று விரிவாக ஆய்வு நடத்தி அதில் கிடைத்துள்ள பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சாதி ரீதியாக கைகளில் கயிறு, கடுக்கன், டாலர் சங்கிலி அணிந்து வரும் பள்ளிகள் மொத்தம் 38 உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.