மிக்ஜாம் புயலின் காரணமாக கடந்த டிச.3, 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மக்கள் பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ‘அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை’ என, எதிர்கட்சிகள் கொதித்தன. இதையடுத்து ‘மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதில் சென்னையில் 13,72,509, திருவள்ளூரில் 6,08,726, செங்கல்பட்டில் 3,12,952, காஞ்சிபுரத்தில் 1,31,149 என மொத்தம் 24.25 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக ரூ.1,486.94 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது பயனாளிகளுக்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை கொட்டியது. அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் வைத்திருக்கிறது, தமிழக அரசு. மழையின் தீவிரம் குறித்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ‘தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்துவருகிறது. ஒருசில இடங்களில் 1871-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. அதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது’ என கூறியிருக்கிறார். இதையடுத்து நிலைமை சீரான பிறகு சம்மந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தலைமை செயலக வட்டாரங்கள், “மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கியிருக்கிறது, தமிழக அரசு. இதற்கிடையில் கனமழையின் காரணமாக தென் மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. இயல்பு நிலை திரும்புவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். பாதிப்பில் இருக்கும் மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது, தமிழக அரசு.
மறுபக்கம் சென்னையை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், 4 மாவட்ட மக்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இல்லை என்றால் மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். எனவே அதுகுறித்த அறிவிப்பு டெல்லிக்கு சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு வசதியாக மழை பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைகள் குறித்த விவரத்தை சேகரித்து வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.