சேலம், செரிரோட்டை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் நேற்று சேலம் மாநகரக் காவல் ஆணையரிடம் மனு ஒன்று அளித்திருந்தார். அந்த மனுவில், `என்னுடைய தாயார் பாக்கிரதியுடன் பிறந்தவர்கள் சீனிவாச மூர்த்தி, ராஜா ராவ். இதில் சீனிவாச மூர்த்திக்குத் திருமணமாகி விவேகானந்த், முரளி ஆகிய இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் முரளி திருமணம் செய்யாமல் இறந்துவிட்டார். ராஜா ராவ் வங்கியில் பணியாற்றினார். கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் சூரமங்கலம் ஸ்டேட் பாங்க் காலனியில், 1997-ம் ஆண்டு பிளாட் வாங்கினார். அதன் மதிப்பு தற்போது 6 கோடி ரூபாய். அவர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2021-ம் ஆண்டு ராஜா ராவ் இறந்துவிட்டார். எனவே அந்த வீட்டுக்கு நானும் சீனிவாச மூர்த்தியின் மகன் விவேகானந்த் ஆகியோரும் சட்டப்படி வாரிசுகள்.
அந்த வீட்டின் மேல் தளத்தில் பிரகாசம் என்பவரும், கீழ் தளத்தில் சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசார அணியின் தலைவருமான ராஜா ராம் என்பவரும் வாடகைக்கு இருக்கின்றனர். இதில், பா.ஜ.க பிரமுகரான ராஜாராம், சரிவர வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யும்படி அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் ஆபாச வார்த்தைகளில் பேசி, என்னை விரட்டிவிட்டார். மேலும் அவரின் கூட்டாளியான ரவீந்திரன் என்பவருடன் சேர்ந்துகொண்டு, போலியான ஆவணம் தயார் செய்து, அந்த வீடு தங்களுக்குச் சொந்தம் என கூறிவருகிறார்.
மேலும் அந்த வீட்டை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இது பற்றி கேட்டபோது, ஆபாச வார்த்தைகளால் பேசியதுடன், `கொன்று தூக்கில் தொங்க விடுவோம்’ என மிரட்டுகின்றனர். எனக்கும் என்னுடைய மாமன் மகன் விவேகானந்துக்கும் ஏதாவது நடந்தால், அதற்கு ராஜாராமும், அவரின் கூட்டாளிகளும்தான் பொறுப்பு. இவர்கள்மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதுடன், வீட்டை மீட்டுத் தர வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின்பேரில், சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி சூரமங்கலம் போலீஸாருக்கு விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.