`கோக் ஸ்டுடியோ’ தமிழின் முதலாவது சீசன் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாவது சீசனைத் தொடங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இதனைத் தயாரித்து வழங்குகிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் விஜய் சேதுபதி, அறிவு மற்றும் அவரின் அம்பஸ்ஸா பேன்ட், ஆண்ட்ரியா, அதிதி ராவ் ஹைதரி, கர்னாடிக் இசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், பாடகர்கள் ஆதித்யா ஆர்.கே, சிவாங்கி ஆகியோர் கோக் ஸ்டியோவின் இரண்டாவது சீசனில் பங்கேற்கின்றனர். இந்த இரண்டாவது சீசனின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய ஷான் ரோல்டன், “கோக் ஸ்டுடியோவின் முதல் சீசனுக்கு முதல்ல நன்றி. கலையை மக்கள்கிட்ட எடுத்துட்டு போறப்போ தேர்ந்தெடுக்கிறதுல சில சிக்கல் இருக்கும். இந்த மாதிரி பண்ணலாம்னு அறிவு அதற்காக அதிகளவுல உழைப்பைப் போடுவார். முதல் சீசனுடைய நோக்கமே தமிழ்நாடு பத்தி சொல்றதுதான். கலை அப்படிங்கிற ஆயுதத்தைப் பலர் பல முனைப்போட பயன்படுத்துவாங்க. பாடகர் ஆதித்யா ஆர்.கே மத்தவங்களைச் சந்தோஷப்படுத்தணும்னு பல விஷயங்கள் பண்றார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்த சீசன் 2ல முக்கியப் பங்கு வகிக்கிறார். நானும் இந்த சீசன்ல இரண்டு பாடல்கள் பண்ணியிருக்கேன்.
நடிகர் விஜய் சேதுபதியும் இந்த சீசன்ல ஒரு பகுதியாக இருக்காரு. அவரும் இப்போ இசையை கத்துகிட்டிருக்கிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அவரே ஒரு பாடல் எழுதிப் பாடியிருக்கார். எல்லோரும் இந்தப் பாடலை கேட்கும்போது அவர்தான் இதை பாடினாரான்னு கேட்டாங்க. நடிகை மற்றும் பாடகரான அதிதி ராவ் ஒரு ஸ்பெஷலான பாடல் பாடியிருக்கார். இந்த சீசன்ல ‘ப்ளீஸ் புரிஞ்சுக்கோ’தான் என்னுடைய ஃபேவரைட். அறிவோட அம்பஸ்ஸா குழு நேர்மறையாக பல விஷயங்களை எடுத்துட்டு போறாங்க. அசல் கோலார், இதுல ராப் இல்லாம ஒரு பாடல் பாடியிருக்கார். நிறைய சிரமங்களை மேற்கொண்டு பாடியிருக்காரு” எனப் பேசினார்.