ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிஃப் முஸ்தஹீன் (30). இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் என்று தெரியவந்தது. இதையடுத்து, கடந்தாண்டு போலீஸ் அவரை உபா சட்டத்தில் கைதுசெய்து, கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன், ஆசிஃப்பின் சிறை அறையினை சோதனையிட்டிருக்கிறார்
அப்போது அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரைக் கைபற்றினார். அதில் அவர் வரைந்து வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியைக் கைபற்றியிருக்கிறார். தொடர்ந்து இது குறித்து சிறை குறிப்பேடுகளில் பதிவுசெய்திருக்கிறார்.
ஆசிஃப், நீதிமன்றத்துக்கு மனுக்களை எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட பேப்பர், பேனாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடிகளை வரைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், “இது இஸ்லாமிய அரசின் கொடி. இதை வைத்திருப்பதில் தவறில்லை.” என்று அவர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இதனிடையே ஜெயிலர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஆசிஃப்,
“நான் விரைவில் சிறையிலிருந்து வெளியேறுவேன். மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஜிஹாத் வேலையைத் தொடர்வேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது.” என மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் ஆசிஃப் முஸ்தஹீன் மீது மீண்டும் உபா சட்டம், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவுசெய்தனர். இது குறித்து பா.ஜ.க மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “ஆசிஃப் முகமுது ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த செய்தி, அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கெனவே 1998 குண்டு வெடிப்பு, 2022 சிலிண்டர் குண்டு வெடிப்பு என தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீள்வதற்குள் வந்திருக்கும் இந்தச் செய்தி, மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தும். கோவை இன்னொரு பயங்கரவாதத் தாக்குதலை தாங்காது. இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ-வுக்கு மாற்ற வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார்.