திருமணமான இளம் பெண் ஒருவர், `தன்னுடைய கணவர் செல்போனில், அவர் பல பெண்களுடன் நெருக்கமாக, அரை நிர்வாண ஆடையுடன் இருப்பது போன்ற போட்டோஸ் இருக்கிறது. பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை மறைத்து ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தஞ்சாவூர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர்களுடன் புகார் அளிக்க வந்த இளம் பெண்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் காயத்திரி (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு ஆன்லைன் மூலம் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதில் தஞ்சாவூர் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த விவேக்ராஜ் என்பவருக்கும், காயத்திரிக்கும் பொருத்தம் வர, கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. விவேக்ராஜ் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் விவேக்ராஜ் பல பெண்களுடன் நெருக்கமாகவும், பெண்கள் அரை நிர்வாணத்தில் இருப்பது போன்ற போட்டோக்களும் அவரின் செல்போனில் இருந்ததை கண்டு காயத்திரி அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து விவேக்ராஜிடம் கேட்டதற்கு இதை வெளியே சொன்னால் தொலைத்து விடுவேன் என மிரட்டியதாகவும் சொல்கிறார் அப்பெண். அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரியும் விவேக்ராஜை போலவே இளம் பெண்ணை மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக தஞ்சாவூர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் வழக்கறிஞர் ஜீவக்குமாருடன் வந்து காயத்திரி புகார் அளித்துள்ளார்.

புகார்

இது குறித்து காயத்திரி கூறுகையில், “திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு பிறகு நானும், எனது கணவர் விவேக்ராஜும் சென்னையில் உள்ள அவரின் அக்கா வீட்டிற்கு சென்று விட்டு ரயிலில் தஞ்சாவூருக்கு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது விவேக்ராஜின் அக்கா குழந்தைகளுடன் அவருடைய செல்போனில் எடுத்த போட்டோவை எனக்கு அனுப்புவதற்காக அவரின் செல்போனை நான் எடுத்தேன்.

அதில் விவேக்ராஜ் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ், அவர் நிர்வாணமாக பல பெண்களுடன் வாட்ஸ் அப்பில் பேசும்போது எடுத்த ஸ்க்ரீன் ஷாட் போட்டோ ஆகியவை இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். பல பெண்களுடன் தொடர்புடைய ஒருவனை திருமணம் செய்து கொண்டு ஏமாந்து விட்டோமா என எனக்கு ஒரே அழுகையாக வந்தது. பின்னர் நான், விவேக்ராஜிடம் உங்க செல்போனில் அசிங்கமான போட்டோஸ் இருக்கிறதே என கேட்டதற்கு, `அதைப்பத்தி நீ கேட்க கூடாது, வெளியில் பேசவும் கூடாது. மீறி யாரிடமும் சொன்னால் தொலைத்து விடுவேன்’ என மிரட்டினார்.

கணவன் – மனைவி சண்டை

அவருடைய குடும்பத்தாரும் அவரை போலவே மிரட்டினர். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நானும் கர்ப்பமாக இருந்தேன். போட்டோ குறித்து விவேக்ராஜிடம் கேட்ட ஆத்திரத்தில் அவர் என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இதில் எனக்கு கரு சிதைந்து ரத்தப் போக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தால் நியாயம் கிடைக்கும் என கடந்த மாதம் 27-ம் தேதி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

எஸ்.பியின் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் இதை முறையாக விசாரிக்கவில்லை. இதனால் மீண்டும் எஸ்.பியிடம் முறையிட்ட பிறகு மகளிர் போலீஸார் கடமைக்காக விசாரணை மேற்கொண்டனர். மேலும், நான் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவில்லை. விவேக்ராஜை தப்பிக்க வைக்கும் நோக்கத்திலேயே அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் செயல்பட்டனர்.

இளம் பென்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட விவேக்ராஜ்

விவேக்ராஜிக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அந்த பென்ணிடம் அவர் `தாலி பத்திரம்’ என பேசும் ஆடியோவும் உள்ளது. பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை மறைத்து நகை, பொருள்கள், பணம் என வரதட்சணை வாங்கி கொண்டு திருமணம் செய்து என்னை ஏமாற்றியிருக்கிறார். உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தும் மகளிர் காவல் நிலைய போலீஸ் நடவடிக்கை எடுக்காததில் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால் தஞ்சாவூர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எனது வழக்கறிஞர்களுடன் வந்து புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

இளம் பெண் புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரதிமதியிடம் பேசினோம், “விவேக்ராஜ் திருமணத்திற்கு முன்பு பல பெண்களுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசியுள்ளான். எதிர்முனையில் பேசிய பெண்கள் அரை நிர்வாண ஆடையுடன் இருந்துள்ளனர். இது குறித்து விவேக்ராஜ் மனைவி கொடுத்த புகாரின் பேரில் விவேக்ராஜ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம். காயத்திரி தரப்பில் சொல்வது போல் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் விவேக்ராஜிடன் தொடர்பில் இருந்த பெண்கள் புகார் அளிக்க வேண்டும்.

வழக்கு பதிவு

விருப்பத்தின் பேரில் தான் அவர்கள் பேசியுள்ளதாக தெரிகிறது. அது தவிர விவேக்ராஜிடம் தொடர்பில் இருந்த பெண்கள் அனைவருமே திருமணம் ஆனவர்கள் என்பதால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கபடக் கூடாது என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் ஆலோசனைப்படி வழக்கு பதிவு செய்து விவேக்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.