திருச்சி தென்னூர் அருகே உள்ள ஆஃபீஸர்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன்( 51). இவர், ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு கொடுப்பது, ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு அனுப்புவது ஆகிய தொழில்களை செய்து வந்தார். இதனால், இவரை ‘ஆம்புலன்ஸ்’ பிரபாகரன் என்றும் அழைத்து வந்துள்ளனர். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். அதோடு, அடிதடி, கொலை என்று செயல்பட்டு வந்த பிரபு மீது உறையூர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் பிரபு உள்ளார். இவர், நேற்று இரவு அரசு மருத்துவமனை எதிரே உள்ள தன்னுடைய அலுவலகமான ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் ஆபிஸில் இருந்துள்ளார். அப்போது, அவர் அலுவலகத்திற்குள் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், முகமூடி அணிந்தபடி நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் பிரபுவை சரமாரியாக தலையில் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பிரபுவின் உடலை உடற்கூராய்வு செய்வதற்காக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கப்பட்டது. அதோடு, மோப்பநாய் கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்தில் கொலையாளிகள் விட்டுச் சென்ற துண்டை மோப்பம் பிடித்தது. மோப்ப நாய் அந்த பகுதியில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் உள்ள காட்சிப்பதிவுகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை வளையத்திற்குள் பிரபு இருந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதோடு, சிறப்பு புலனாய்வு குழுவினர், பிரபுவை மீண்டும் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் பிரபு வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். பா.ம.க கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்த அவரை சமீபத்தில்தான் அந்த கட்சி தலைமை கட்சியை விட்டு நீக்கியது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக, திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், பஷீர், ரியாஸ் ராஜேஷ் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் ஆகிய நான்கு பேர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள அப்பு என்கிற ஹரிஹரனை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சியில் முக்கிய இடத்தில் வைத்து ரெளடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், திருச்சி மாவட்ட மக்களை அதிர வைத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.