சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும், மண்வளமும் பாதுகாக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களால் விளையக்கூடிய ஆபத்துகளை உணர்ந்து, தமிழகம் முழுவதும் அதை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டனர்.
பிறகு, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் சீமைக் கருவேல வழக்கு தொடர்பான, அரசின் நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் அதிருப்தி அடைந்துள்ள நீதிமன்றம், “சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கையை வகுத்து 2 ஆண்டுகள் ஆனபோதும் முன்னேற்றம் இல்லை.
சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து திட்டம் வகுக்க வேண்டும். இம்மரங்களை எப்படி, எப்போது அகற்றுவது என்பது குறித்து சுற்றுச்சூழல், நீர்வளம், ஊரக வளர்ச்சித்துறை செயலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தி திட்டம் வகுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதிலும் ஒரே நேரத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற டெண்டர் கோரலாம்; அதோடு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடலாம் என்ற ஆலோசனையையும் வழங்கி வழக்கை வரும் ஜனவரி 8-ம் தேதியன்று ஒத்திவைத்தது.