பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 62 வயது பெண் மீது அவரின் மருமகள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார்.
62 வயது பெண்ணின் மூத்த மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மனைவி கொடுத்த புகாரில், ‘எனக்கும் அவருக்கும் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்பட்டது. அவர்கள் சோஷியல் மீடியா மூலம் பழகினர். நட்பு காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அதோடு, தன்னை திருமணம் செய்யவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார். இதையடுத்து நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இருவருக்கும் இடையே வீடியோ கால் மூலம் திருமணம் நடந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு அப்பெண், தன் கணவரின் அம்மா வசிக்கும் வீட்டில் சென்று வசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், அவர் கணவரின் தம்பி, போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து தன் தாயார் மற்றும் அண்ணியுடன் வசித்து வந்தார். சில நாள்களுக்குப் பிறகு, அவர் போர்ச்சுக்கலுக்கு திரும்பினார். அவரிடம், தன்னையும் அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார் மனுதாரரான அண்ணி. ஆனால், அவர் அழைத்துச் செல்லவில்லை.
இந்நிலையில், தன் கணவருடனான திருமண உறவை துண்டிக்கும்படி மனுதாரர் தன் மாமியாரிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மாமியார் தன் மருமகளுக்கு 11 லட்சம் ரூபாய் கொடுத்து செட்டில் செய்தார். ஆனாலும் பணம் அதிகமாக கொடுக்கும்படி மருமகள் கேட்டார். மாமியார் மறுத்துவிட்டார்.
இதனால், 62 வயதாகும் தன் மாமியார் மீது அவரின் மருமகள் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் செய்துள்ளார். அதில், ’என் கணவரின் இளைய சகோதரர் போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியா வந்து எங்களுடன் தங்கி இருந்தபோது என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதோடு அக்காட்சிகளை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார். பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த என்னை என் மாமியார் தடுத்துவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மாமியார், உள்ளூர் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவர் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார். அம்மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் மற்றும் சஞ்சய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா, ‘’பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் செய்ய முடியாது. அதுவும் பெண் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு கூற முடியாது’’ என்று வாதிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘பெண் மீது பாலியல் வன்கொடுமை புகார் பதிவு செய்ய முடியுமா?’ என்று கேள்வி எழுப்பி, இது தொடர்பாக பஞ்சாப் போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மும்பை: பெண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
இன்னொரு சம்பவத்தில், மும்பையில் தனது வீட்டில் தங்கியிருந்த 16 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸார் 40 வயது பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பை, தார்டுதேவ் பகுதியில் வசிக்கும் அப்பெண், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்து தன் வீட்டில் தங்கியிருந்த 16 வயது சிறுவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் செய்துள்ளார். அப்புகாரில் அச்சிறுவனின் வயது 20 என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் சிறுவனை விசாரித்தபோது, அவருக்கு 16 வயதுதான் ஆகி இருந்தது. இதையடுத்து அவர் சிறுவர் சீர்திருத்த சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த அச்சிறுவனின் தாயார், தன் மகனை 40 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.