நேற்றிரவு முதல் தற்போதுவரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “தற்போது இலங்கையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, அடுத்த இரு தினங்களுக்குக் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும், டிசம்பர் 2, 3 தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று அளவுக்கு அதிகமாக வீசும் என்பதால், அடுத்த மூன்று நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆழ்கடலிலிருக்கும் மீனவர்கள் இன்றைக்குள் கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றார்.