`உயிரியல் பாடப்பிரிவை (Biology) தேர்ந்தெடுக்காத மாணவர்களும் மருத்துவராகலாம்’ என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) கூறியுள்ளது.
மருத்துவராக வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் முந்தைய அறிவிப்பின்படி, அரசு அல்லது தனியார் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். இவர்கள் அடுத்ததாக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
அதோடு வெளிநாட்டில் மருத்துவ படிப்பை படிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தால் தகுதிபெறும் சான்றிதழையும் பெறலாம்.
தற்போது தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, உயிரியல் பாடத்தைத் தேர்வு செய்யாத மாணவர்களும் மருத்துவம் அல்லது பிடிஎஸ் படிப்பை பெற முடியும்.
இந்த மாணவர்கள் தங்களது பாடத்தோடு சேர்த்து கூடுதல் பாடமாக (Additional subject) உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
முந்தைய விதிகளின்படி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் கூடுதல் பாடங்களை எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இப்போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் உயிரியல் அல்லது பயோடெக்னாலஜி தேவைப்படாவிட்டாலும், மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் நபர்கள் கூடுதல் பாடத்தை படிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கான தகுதிச் சான்றிதழ்களை வழங்குவது மற்றும் நீட் தகுதி தேர்வுக்கான அளவுகோல்களைத் தளர்த்துவது குறித்து ஜூன் 14-ம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் விவாதித்தன் முடிவாக இந்தத் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது .