சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சைலா ஜோஸ்பின் (88). இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `அம்பத்தூர் வட்டம், கொன்னூர் கிராமத்தில் 3,544 சதுரஅடி கொண்ட காலி மனையை என்னுடைய தந்தை வேளாங்கண்ணி என்பவர் 1965-ம் ஆண்டு வாங்கினார். கடந்த 1979-ம் ஆண்டு வேளாங்கண்ணி இறந்துவிட்டார். அதனால் அந்த இடத்தை நான் பராமரித்து வந்தேன். தற்போது அந்த இடத்தை சிலர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்துவிட்டனர்’ எனப் புகாரளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, துணை கமிஷனர் ஆரோக்கியம், உதவி கமிஷனர் ராஜபால், இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு (57), தி.நகரைச் சேர்ந்த குருசாமி (63), திருவேற்காடு அயப்பாக்கத்தைச் சேர்ந்த முருகப்பன் (61), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த முத்து (55), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ் (52) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 4 கோடி ரூபாயாகும். இந்த வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார் உள்ளிட்டோரும் முறைகேட்டிற்கு உதவியதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “வேளாங்கண்ணி என்பவருக்கு சொந்தமான 3,544 சதுரஅடி கொண்ட இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க ஒரு கும்பல் திட்டமிட்டது. இதற்காக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் பாட்டி வேளாங்கண்ணி பெயருக்கு அந்த இடத்தை மாற்றி ஆவணங்களைத் தயாரித்தது அந்தக் கும்பல். பின்னர் நாகராஜின் பாட்டி வேளாங்கண்ணி என்பவர் அந்த இடத்தை சில கோடி ரூபாய்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தரப்புக்கு விற்றிருக்கிறார்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வேளாங்கண்ணியை பெண் என்று கருதிய மோசடி கும்பல், அதற்கெற்ப வேளாங்கண்ணி என்ற பெயரில் மூதாட்டி ஒருவரையும் பெண் என்று கருதியே ஆவணங்களை தயாரித்திருக்கிறது. இதுதான் மோசடி கும்பலுக்கு சிக்க வைக்க முக்கிய காரணம். ஆனால் உண்மையில் வேளாங்கண்ணி என்பவர் ஆண். இருப்பினும் இந்த மோசடியின் பின்னணியில் பின்னணியில் பெரிய நெட்வொர்க் உள்ளது. அவர்களைப் பிடித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் கைது செய்யப்பட்டிருக்கும் பாபு, டெய்லராக வேலைப்பார்த்தப்படியே ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். குருசாமி என்பவர் பில்டர். அதனால் அவரும் இடங்களை வாங்கி விற்று வந்திருக்கிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.