ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் மீண்டும் இணைகிறார் சாம் ஆல்ட்மேன்!
சாட்ஜிடிபியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ-யின் இயக்குநர்கள் குழு, வெள்ளிக்கிழமையன்று சாம் ஆல்ட்மேனை சி.இ.ஓ பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
நிர்வாக இயக்குநர்கள் குழுவோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சாம் ஆல்ட்மேன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது.
உலக அளவில் டெக் துறையில் முக்கிய முகமாக இருக்கும் சாம் ஆல்ட்மேனின் பதவி நீக்கம், நிறுவனத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அவருக்கு ஆதரவாகப் பலரும் குரல் எழுப்பத் தொடங்கினர்.
இவரின் பணிநீக்கத்துக்குப் பின் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் மற்றும் பல முக்கிய உயர் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சாம் ஆல்ட்மேனை நிறுவனத்தில் சேர்க்க வேண்டும், அதோடு இயக்குநர் குழு கலைக்கப்பட வேண்டும் என 700-க்கும் மேற்பட்ட ஓப்பன்ஏஐ ஊழியர்கள், நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தனர்.
ஒருவேளை கோரிக்கை மறுக்கப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் ஊழியர்கள் கூறி இருந்தனர். ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சாம் ஆல்ட்மேனுக்கு ஆதரவு வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சாம் ஆல்ட்மேனை மீண்டும் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்வதாக ஓப்பன்ஏஐ நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சேல்ஸ்ஃபோர்ஸ் இன்க் இன் முன்னாள் இணை தலைமை நிர்வாக அதிகாரியான பிரட் டெய்லர் புதிய இயக்குநர் குழுவுக்கு தலைமை தாங்குவார். லேரி சம்மர்ஸ், ஆடம் ஆஞ்சல்லோ ஆகியோர் இயக்குநர்கள் குழுவில் இடம்பிடிப்பர்.
இந்தப் புதிய குழுவுடன் சாம் ஆல்ட்மேன் ஓப்பன்ஏஐக்கு தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்புவதற்கு கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியுள்ளோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.