ஹாங்காங் மற்றும் சீனாவின் உணவு கலாசாரத்தில் பாம்பிற்கு முக்கிய இடம் உண்டு. பல காலகட்டங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஃப்யூஷன் செய்யப்பட்ட உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஹாங்காங்கில் உள்ள பீட்ஸா ஹட் ஒன்று பாம்பினால் செய்யப்பட்ட பீட்ஸாவை வழங்கி வருகிறது. `பாம்பு பீட்ஸா’ தற்போது அப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகளிடம் பிரபலமடைந்து வருகிறது.
துண்டாக்கப்பட்ட பாம்பின் இறைச்சி, கறுப்பு காளான்கள் மற்றும் பன்றியின் கால் இறைச்சி, கிளாசிக் கான்டோனீஸ் பாம்பு சூப் ஆகியவை சேர்த்து இந்த பீட்ஸா தயாரிக்கப்படுகிறது. இலையுதிர் மாதங்களில் பாம்புகளைச் சாப்பிடுவதால், ரத்த ஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் நீண்ட காலமாக நம்புகிறார்கள்.
பாம்பு பீட்ஸாவை குறித்து ஹாங்காங்கை பூர்வீகமாகக் கொண்ட பாம்பு சூப் பிரியர் ரேச்சல் வோங் கூறுகையில், “சிறிதளவு கோழி இறைச்சியைப் போன்றும், மீன் மற்றும் பிற கடல் உணவுகள் போன்றும் இந்த பாம்பு பீட்ஸாவின் சுவை இருக்கிறது. எனவே குளிர்காலத்தில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவாக இதைச் சாப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மற்றோர் உணவுப் பிரியர் மாபெல் சீஹ் கூறுகையில், “இது பயமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்… பல கலாசாரங்களில், குறிப்பாக மேற்கு நாடுகளில் பாம்புகள் உணவல்ல” என்று கூறியிருக்கிறார்.
`இதையெல்லாம் சாப்பிடுகிறார்களா’… என நீங்கள் கேள்விப்பட்ட உணவுகள் இருந்தால் கமென்டில் சொல்லுங்கள்?!