சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுவதாகவும் மற்றொரு மனு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பதாகவும், பணி நியமனம் உட்பட எந்த ஒரு கோப்புக்கும் ஒப்புதல் கொடுக்க ஆளுநர் மறுப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். அரசின் தரப்பில், “2020-ம் ஆண்டு தொடங்கி, பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. பணி நியமனம் உட்பட எந்த ஒரு கோப்புக்கும் ஆளுநர் அனுமதி வழங்குவதில்லை. As Soon As Possible என்ற வாக்கியத்தை ஆளுநர் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறார். அரசியல் சாசனப் பிரிவுகள் 200, 163 ஆகியவை வழங்கிய அதிகாரத்தை, ஆளுநர் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.  

டி.என்.பி.எஸ்.சி-யில் தலைவர் பதவி உட்பட 14 பதவிகளில், 10 பதவிகள் காலியாக இருக்கின்றன. இப்படி இருந்தால், அரசு எப்படி இயங்க முடியும்… இது அரசின் உரிமைகளைப் பறிக்கும் விஷயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்” என்று வாதிடப்பட்டது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

இதனை கேட்ட தலைமை நீதிபதி, “தமிழக ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மசோதாமீது மாற்றுக் கருத்து இருந்து திருப்பி அனுப்புவதாக இருந்தால், உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது” என்றார்.

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆளுநரின் செயலாளருக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் 24-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அன்றைய தினம் மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியிருக்கிறது. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.