இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். திருக்கோணமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையைத் திறந்து வைத்து, சர்வதேச வர்த்தகத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் வங்கியின் பங்கைப் பாராட்டினார்.
நிதியமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவருடன் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய கமிஷனர் கோபால் பால்கே மற்றும் எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா ஆகியோரும் கலந்துகொண்டனர். திருகோணமலையில் வங்கி கிளையைத் திறந்து வைத்த நிர்மலா சீதாராமன், அதன் 159 வருடக் குறிப்பிடத்தக்கச் செயல்பாட்டைப் பாராட்டி இலங்கையின் மிகப் பழமையான வங்கியான எஸ்பிஐ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது வணிகத்தைத் தொடர்ந்து வளர்த்து வருவதாகவும் பாராட்டினார்.
“இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்த போது இந்தியாவின் மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை இலங்கைக்கு சுமுகமாக வழங்க எஸ்பியைதான் வழிவகுத்துள்ளது. மேலும் சர்வதேச வர்த்தகத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் SBI Srilanka தொடர்ந்து பங்கு வகிக்கிறது” என்று நிதியமைச்சர் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் திருக்கோணமலையில் உள்ள இந்திய ஆயில் நிறுவன வளாகத்தைப் பார்வையிட்டார். நிதியமைச்சரின் இந்த இலங்கை பயணத்தின் போது இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே 2018-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 12-வது மாநாடும் நடைபெறவுள்ளது.