கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி சீட்டு நடத்தி வருகிறது. ஓணப்பண்டிகை, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளுக்கும் பெரிய அளவிலான பம்பர் பரிசுகள் அறிவித்து லாட்டரிச் சீட்டு விற்பனை நடத்திவருகிறது. ரூ.25 கோடி, ரூ. 12 கோடி என பம்பர் பரிசுகளால் மக்களை கவர்ந்து வருகிறது கேரள லாட்டரித்துறை. மற்ற சமயங்களில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான பரிசு தொகைகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்துகொண்டே இருக்கும். இதனால் கேரளாவை ஒட்டியுள்ள பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் லாட்டரிகலை வாங்கி வருகின்றனர். ஒவ்வொரு லாட்டரிச் சீட்டு குலுக்கலின் போதும் பரிசு விழும் நபர்களின் பின்னணியும், கதைகளும் வித்தியாசமானதாக இருக்கும்.
அந்த வகையில் கடந்த புதன்கிழமை பிப்டி, பிப்டி என்ற லாட்டரிச்சீட்டு முடிவுகளை கேரள லாட்டரித்துறை வெளியிட்டிருந்தது. ஒருகோடி ரூபாய் முதல் பரிசாகக்கொண்ட அந்த லாட்டரியின் குலுக்கல் கடந்த புதன்கிழமை நடந்தது. அதில் முதல் பரிசான ஒரு கோடி ரூபாய்க்கான லாட்டரிச்சீட்டை யாரும் ஒப்படைக்கவில்லை. இந்த நிலையில் கோட்டயம் மூலவட்டம் பகுதியைச் சேர்ந்த சுனில்குமார்(52) என்ற ஆட்டோ டிரைவருக்கு ஒருகோடி ரூபாய்க்கான பரிசு விழுந்தது தெரியவந்தது.
நேற்று அந்த லாட்டரிச்சீட்டை லாட்டரித்துறையில் ஒப்படைத்தார். ஏன் சில நாட்கள் தாமதம் என கேட்டதற்கு, தனது லாட்டரிச் சீட்டுக்கு பரிசு விழவில்லை என நினைத்து குப்பையுடன் போட்டு வைத்திருந்ததாகவும். ஆனால், திடீரென ஒரு யோசனை வந்ததால் அந்த சீட்டை எடுத்துப்பார்த்ததில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது தெரியவந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் சுனில் குமார். கோட்டயம் மூலவட்டம் பிலாமூடு ஸ்டாண்டில் ஆட்டோ ஓடிவருகிறார் சுனில் குமார்.
இதுகுறித்து சுனில்குமார் கூறுகையில்,”நான் பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் வழக்கம் கொண்டவன். வாங்கிய லாட்டரிச்சீட்டுக்களில் பரிசு எதுவும் கிடைக்காததால் அந்த சீட்டுக்களை ஒரு வேஸ்ட் குட்டையில் போட்டு வைப்பது வழக்கம். பல ஆண்டுகளாக நான் வாங்கிய லாட்டரிச்சீட்டுகள் அந்த குட்டையில் குவியலாக போட்டு வைத்திருக்கிறேன். இப்போது வாங்கிய பிப்டி பிப்டி லாட்டரிச்சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் கடந்த புதன்கிழமை வந்த சமயத்தில் முதல்பரிசு ஆலப்புழாவில் விற்பனையான லாட்டரியிலும், இரண்டாம் பரிசு கொல்லத்தில் விற்பனை ஆன லாட்டரிக்கும் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் எனது லாட்டரிச்சீட்டுக்கு பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி வழக்கம்போல குட்டை போல் சீட்டை போட்டுவைத்தேன்.
வியாழக்கிழமை செய்தித்தாளில் லாட்டரி முடிவுகளை பார்த்தேன். ஆனாலும் அதை கவனமாக பார்க்கவில்லை. சில நாட்கள் கடந்தபின்புதான் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்த லாட்டரிச்சீட்டான 600-ம் நம்பர் கொண்ட சீட்டு நான் வாங்கியதுதானே என்ற சந்தேகம் எழுந்தது. குட்டையில் வீசிய லாட்டரிச்சீட்டை தேடி எடுத்து பார்த்தபோதுதான் நான் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு பரிசு விழுந்தது தெரியவந்தது. ஒருகோடி ரூபாய் பரிசு கிடைத்ததை உறுதிசெய்ததும், ‘அடிச்சு மோனே ஒரு கோடி’ என்ற சினிமா வசனம்தான் நினைவுக்கு வந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது வீட்டை அடகு வைத்து கடன் வாங்கி உள்ளேன். நகைகள் அடகு வைத்திருக்கிறேன். கடன்களை எல்லாம் அடைக்க வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.