சந்தோஷம், துக்கம் என எந்தவொரு மனநிலைக்கும் ஆறுதல் அளிக்கும் இடம் கடல் தான். இந்த பரந்துபட்ட அலைகளைக் காண உள்ளூர் வாசிகள் தாண்டி சுற்றுலா பயணிகளும் புதுச்சேரியில் குவிவதுண்டு.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் திடீரென கடல் நீர் சிவப்பாக காட்சி அளித்து திகிலை ஏற்படுத்தி உள்ளது. கடல் நீர் திடீரென சிவப்பாக மாறியது குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி அரசு தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதோடு சுற்றுச்சூழல் நிபுணர்களும் நிறம் மாறிய கடல் நீரின் மாதிரிகளை ஆய்வு செய்யக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடல் நீர் சிவப்பாக மாறுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த லோகேஷ் பார்த்திபனிடம் பேசியபோது, “பொதுவாக நீர் நிலைகள் நிறம் மாறுவதற்கான காரணம் அதிகளவு வேதி ரசாயனங்கள் சேர்வதால் இருக்கலாம். உரத்தில் இருந்து வரக்கூடிய பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே வேதி ரசாயனங்களுக்கான ஆதாரமாக இருக்கிறது.
கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. கடல் நீரில் வெப்பம் அதிகரித்தால் கடல் பாசிகளின் அளவு அதிகரிக்கலாம். இப்படி பாசிகள் அதிகரிப்பதை `Algal bloom’ என்று சொல்கிறோம்.
அடுத்தாக கடல் நீரின் ஓட்டம்(அலைகள்) குறைவாக இருந்தாலும், பாசிகள் அதிகரிக்கும். இந்த மூன்று காரணங்களே பொதுவாகக் கடல்நீர் நிறம் மாறுவதற்கான காரணங்களாக இருக்கிறது.
கடல் நீர் நிறம் மாறுவது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி எழும். பொதுவாக கடல் நீர் நிறம் மாறுவது இரண்டு வகைகளில் நடைபெறும். ஒன்று இயற்கையால், மற்றொன்று மனித செயல்பாடுகளால் நடக்கும்.
மனித செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய கடல் நீர் நிற மாற்றம் நச்சுத் தன்மையை அதிகரிக்கும். பாசிகளின் அதிகரிப்பதால் அங்குள்ள சுற்றுச்சூழல் (Ecosystem) முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் அங்குள்ள மீன்கள் இறப்பதற்கு காரணமாக அமையும்.
குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீரின் நிறம் மாறுவதை கவனித்து இருப்போம். பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் மாறும். நீரின் ஒவ்வொரு நிற மாற்றத்திற்கும் குறிப்பிட்ட பாசிகளின் பெருக்கம் காரணமாகிறது.
இப்போது கடல் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதற்கு கோனியாலாக்ஸ் பாசியே காரணம். இது `Dinoflagellates’ குடும்பத்தை சேர்ந்தது. உரங்களிலிருந்து வரும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை, தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத நீரிலிருந்து வெளியேறும் கனரக உலோகங்கள் போன்றவை இந்த பாசியின் பெருக்கத்திற்கு காரணமாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.