`தி.மு.க-வை விமர்சிக்கும் அளவுக்கு அ.தி.மு.க-வை சீமான் விமர்சிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமியை சித்தப்பா என உறவுமுறைகூறி அழைக்கிறார். அ.தி.மு.கவின் `பி’ டீமாகத்தான் சீமானின் நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சீமான் மீது சுமத்திவந்திருகின்றன. அதேபோல, பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகியதையடுத்து சீமானின் நாம் தமிழர் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் இணையப்போவதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.கவிடமிருந்து கூட்டணி அழைப்பு வந்ததை சீமான் ஒப்புக்கொண்டிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி பிளவு:
கடந்த செப்டம்பர் மாதம் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க அதிரடியாக அறிவித்தது. அந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக சீமான் தெரிவித்தார். குறிப்பாக, “பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அ.தி.மு.கவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன். மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு! காங்கிரஸ், பா.ஜ.க எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான். அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம், அதனுடையப் பாதுகாப்பு, எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றிற்கும் எதிரானவையே! பா.ஜ.க-வுடனான உறவைத் துண்டித்திருக்கும் இந்நிலைப்பாட்டில் அ.தி.மு.க இறுதிவரை உறுதியாக இருக்குமானால் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என கருத்து தெரிவித்தார்.
அ.தி.மு.க விரித்த கூட்டணி வலை!
பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதுக்குப் பிறகு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், அ.தி.மு.க தனது தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்காக சிறுசிறு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதற்கேற்ப மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஜனநாயக முஸ்லிம் மறுமலர்ச்சி கழகம் போன்ற இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். அந்த வகையில், சீமானின் நாம் தமிழர் கட்சியையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அ.தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன.
இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், `அ.தி.மு.க தரப்பிலிருந்து கூட்டணி அழைப்பு வந்தது’ என்பதை உறுதிபடுத்திப் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பத்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாட்டில் மிகப் பெரிய கூட்டணி வைத்திருப்பது நான் தான். 8 கோடி மக்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறேன். ஒரு தலைவன் என்பவன் மக்களை முழுமையாக நம்ப வேண்டும்; நேசிக்க வேண்டும். என் மக்களை முழுமையாக நம்புகிறேன்; நேசிக்கிறேன். அதனால் நாங்கள் தேர்தலில் எப்போதும் தனித்துதான் போட்டியிடுகிறோம். அந்த வகையில், பாராளுமன்றத் தேர்தலிலுமும் தனித்து தான் போட்டியிடுவோம் என்று முடிவு செய்திருக்கிறோம். 20 ஆண்கள், 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். ஏறத்தாழ வேட்பாளர்கள் தேர்வு முடிவு பெற்றுவிட்டது!” என்றார்.
`அ.தி.மு.க அழைப்பை நிராகரித்தேன்’ – சீமான்:
தொடர்ந்து பத்திரிகையாளர்கள், `அ.தி.மு.க – நாம் தமிழர் கட்சி கூட்டணி ஏற்படுமா?’ என்று கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த சீமான், “நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். இது ஐயாவுக்கே (எடப்பாடி பழனிசாமி) தெரியும். அவர் அழைத்துப் பேசும்போது, `நான் வரமுடியாது. அது என் கொள்கை முடிவு’ என்று கூறிவிட்டேன்” என அழுத்தமாகத் தெரிவித்தார். மேலும் பேசியவர், “கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி விடுமுறை அறிவித்தார். தமிழர் வரலாற்றில் தைப்பூசத்தில் விடுமுறை அறிவித்தது அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதனால் தமிழர் என்ற உறவு உணர்வு அடிப்படையில் ஒரு நெருக்கம் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை. அ.தி.மு.க உடன் கூட்டணி என்பது எனக்கு உடன்படாது. தலைவர் பிரபாகரன் குறித்து பேசும்போது எடப்பாடி பழனிசாமி எழுந்து சென்றுவிடுவார். அதனால் அது கடினம்!” என்றும் கூறினார்.
முன்னதாக இதே கேள்விக்குப் பதிலளித்த சீமான், “தி.மு.க-அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகளோடும், பா.ஜ.க-காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளோடும் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்பது எங்களின் கொள்கை முடிவு. இது அவர்களுக்கும் தெரியும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டியிடப்போகிறோம். 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் என உறுதி செய்துவிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.