இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்னையில், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைத்தான் இந்தியா நீண்டகாலமாக எடுத்துவந்திருக்கிறது. 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுடன் மோடி அரசு நெருக்கம் காட்டிவருகிறது.
கடந்த வாரம் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என்று அறிவித்தார். ஹமாஸ் படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் தீவிரமான வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில், ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்டதுடன், பாலஸ்தீன மக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், பாலஸ்தீனம் தரப்பில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி பிரதமர் மோடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தையே சரியான தீர்வு என்றும் காங்கிரஸ் கூறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் இது குறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘இஸ்ரேல் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. இஸ்ரேலிய மக்களின் நியாயமான பாதுகாப்பு நலன்களை உறுதி செய்யும் அதே வேளையில், சுயமரியாதை, சமத்துவம், கண்ணியமான வாழ்க்கைக்கான பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. போர் நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
ஹமாஸ் படையினர் அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து நடத்திவரும் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலியர்கள் 130 பேர் கடத்தப்பட்டு, காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திவரும் வான்வெளித் தாக்குதல்களில் காஸா பகுதியில் பாலஸ்தீன மக்கள் 500 பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு தரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவிலிருந்து 1.2 லட்சம் பொதுமக்கள் வெளியேறியதாகவும், காஸா பகுதியில் 1,00,000 துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இஸ்ரேலியர்கள் 130 பேரை பிணைக் கைதிகளாக காஸாவில் ஹமாஸ் படையினர் பிடித்துவைத்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறிவருகிறது.
வாஜ்பாய் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி உட்பட இதற்கு முன்பு மத்தியில் இருந்த எல்லா அரசுகளும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றன. பாலஸ்தீனத்துக்கு அரசியல் ரீதியான ஆதரவை அளித்துவந்ததுடன், பாலஸ்தீன மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் இந்தியா வழங்கியிருக்கிறது. பாலஸ்தீனத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 1995-ம் ஆண்டிலிருந்து 30 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவிகளையும் இந்தியா வழங்கியிருக்கிறது.
பாலஸ்தீனத்தில் கல்விக்கு ஆதரவு வழங்குவதில் முன்னணி நாடாக இந்தியா விளங்கியது. இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் கீழ் பாலஸ்தீன மாணவர்களுக்கு நூற்றுக்கணக்கான கல்வி உதவித்தொகைகளை இந்தியா வழங்கியிருக்கிறது. அந்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் 1.25 மில்லியன் டாலர் நிதியை பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா நிவாரண முகமைக்கு 2016-ம் ஆண்டு இந்தியா வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலைப்பாடு, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதே நேரம் காங்கிரஸ் கடந்த காலங்களில் இருந்த பாலஸ்தீன ஆதரவு நிலையில் நீடிப்பதை காண முடிகிறது.
இதனிடையே, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய், “ஹமாஸை ஆதரிப்பதன் மூலமாக காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா பல பயங்கரவாத தாக்குதல்களைச் சந்தித்ததில் ஆச்சரியம் இல்லை.” என்றிருக்கிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் இந்த விவகாரத்தில் காங்கிரஸை சாடி இருக்கிறார். `ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை காங்கிரஸ் கட்சி மறைக்கப் பார்க்கிறது. இது பாலஸ்தீனத்தில் உள்ள பயங்கரவாதிகளை ஆதரிப்பது போல் உள்ளது’என்றிருக்கிறார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் அங்குள்ள நிலவரத்தை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.