விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (36) என்பவர், பழைமையான மாணிக்க வாசகர் ஐம்பொன் சிலையை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி செய்வதாக, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக ஏ.டி.ஜி.பி சைலேஸ் குமார் யாதவ் உத்தரவின்பேரில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில், எஸ்.பி சிவக்குமார் தலைமையிலான போலீஸார், பாலமுருகனைப் பிடிப்பதோடு சிலையை மீட்கவும் திட்டமிட்டனர். இதையடுத்து டி.எஸ்.பி முத்துராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், சத்திய பிரபா மற்றும் போலீஸார்கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார், சிலை வாங்கும் இடைத்தரகர்போல பாலமுருகனைச் சந்தித்துப் பேசினர். அப்போது மாணிக்க வாசகர் சிலையைக் காண்பித்த பாலமுருகன், அதற்கு இரண்டு கோடி ரூபாய் என பேரமும் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது சிலை குறித்து இடைத்தரகர்கள்போல நடித்த போலீஸார், பாலமுருகனிடம் மாணிக் கவாசகர் சிலையை வாங்குதாக உறுதியளித்ததோடு, வேறு யாரிடமாவது சிலைகள் இருக்கிறதா என்று பேச்சுக் கொடுத்தனர். சென்னையைச் சேர்ந்த தன்னுடைய நண்பன் பிரபாகரனிடம் விநாயகர் சிலை இருப்பதாக பாலமுருகன் தெரிவித்தார். இதையடுத்து பாலமுருகனை சென்னைக்கு வரவழைத்த இடைத்தரகர்கள்போல நடித்த போலீஸார், பிரபாகரனிடமிருந்து விநாயகர் சிலையை வாங்க பேரம் பேசினார்கள்.
போலீஸார் விரித்த வலையில் சிக்கிய பாலமுருகனும் பிரபாகரனும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ரகசிய இடத்துக்கு சிலை வாங்குபவர்களை வரவழைத்தனர். உடனே இடைத்தரகர்கள்போல நடித்த போலீஸாரும் அவர்கள் கூறிய இடத்துக்குச் சென்று காத்திருந்தனர். சிலைகளை இருவரும் பெட்டிகளில் மறைத்து வைத்திருந்தனர். பணம் கொடுத்தால் சிலைகளைக் கொடுப்பதாக இருவரும் கூறினர். உடனே சிலை வாங்குவதுபோல நடித்த போலீஸார், தனிப்படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் பாலமுருகனையும், பிரபாகரனையும், அவர்களுக்கு உதவவந்த மணிகண்டனையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை, மாணிக்க வாசகர் ஐம்பொன் சிலை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸார், “பறிமுதல் செய்யப்பட்ட மாணிக்க வாசகர் ஐம்பொன் சிலையின் உயரம் 25 செ.மீ, அகலம் 8 செ.மீ. ஒன்றரை கிலோ எடை. அதேபோல விநாயகர் சிலையின் உயரம் 50 செ.மீ, அகலம் 26 செ.மீ, எடை 20 கிலோவாகும். சிலைகள் குறித்து விசாரித்தபோது, இந்த இரண்டு சிலைகளும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியிலுள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு சிலைகளும் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றின் சர்வதேச மதிப்பு 2 கோடி ரூபாய். இதையடுத்து சிலைகளை விற்க முயன்ற மூன்று பேர்மீதும் வழக்கு பதிவுசெய்து, அவர்களைக் கைதுசெய்திருக்கிறோம். சிலைகள் எந்தக் கோயில்களிலிருந்து திருடப்பட்டன என விசாரணை நடந்து வருகிறது. கைதானவர்களின் பின்னணியை விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.