மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில் பவார் (30). இவரின் மனைவி ரேகா (27). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் இருவரும் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். திருமுருகன்பூண்டி பழனியப்பா நகரில் வசித்து வந்தனர். உகாதி பண்டிகைக்கு ஊருக்குச் சென்றுவிட்டு, கடந்த சில நாள்களுக்கு முன்புதான் திருமுருகன்பூண்டிக்கு திரும்பியிருக்கின்றனர்.
இன்று காலை, ரேகாவை பணிக்கு அழைக்க சக தொழிலாளர்கள் அவரது வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அப்போது, வீட்டுக்கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரேகா கொலைசெய்யப்பட்டுக் கிடப்பதும், குழந்தைகள் மற்றும் கணவர் அனில் பவார் மாயமானதும் தெரியவந்தது.
இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீஸார், ரேகாவின் சடலத்தைக் கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூலம், ரேகாவின் கணவர் அனில் பவாரை தொடர்பு கொண்டபோது, அவர் குழந்தைகளுடன் கரூரில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து கரூர் போலீஸார் அங்கு வைத்து அனில் பவாரைப் பிடித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீஸார், “அனில் பவாருக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் ரேகாவுக்கும், அனில் பவாருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பிரச்னை எழுந்தது. இதில், ஆத்திரமடைந்த அனில் பவார், மனைவி ரேகாவை அடித்துக் கொலைசெய்திருக்கிறார். பின்னர், அங்கிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு, மகாராஷ்டிராவுக்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். கரூரில் கைதுசெய்யப்பட்ட அனில் பவாரிடம் விசாரித்து வருகிறோம்” என்றனர்.