வான்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த கற்கள் அடிக்கடி பூமிக்கு அருகே கடந்து செல்வது வழக்கம். அவற்றில் சில கற்கள், பூமிமீதும் விழுந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும்போது காற்று உராய்வு ஏற்பட்டு, தீ பிடித்து எரிந்து சாம்பலாகி விடுவதுண்டு. இது போன்ற பல்வேறு விந்தைகள்கொண்ட வான்வெளியில், தற்போது புதிய ஆபத்தை நாசா விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
பென்னு எனப் பெயர் வைக்கப்பட்ட கார்பன் நிறைந்த சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும், அந்த சிறுகோள் இன்னும் 159 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது செப்டம்பர் 24, 2182-ல் பூமியைத் தாக்கக்கூடும் என்றும் கணித்திருக்கின்றனர். 1,610 அடி அகலமுள்ள இந்தக் கோள், உலகின் உயரமான கட்டடமான எம்பயர் ஸ்டேட் கட்டடத்தைவிட உயரமானதாக நம்பப்படுகிறது. அந்தக் கோள் நமது பூமியைத் தாக்கினால் 1,200 மெகா டன் ஆற்றலை வெளியிடலாம்.
அதாவது இதுவரை உருவாக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த அணு ஆயுதத்தைவிட 24 மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாசாவின் OSIRIS-REx அறிவியல் குழுவின் கூற்றுப்படி, 1999-ல் முதன்முதலில் இந்த சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 1999, 2005 மற்றும் 2011-ல் விண்வெளி சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து சென்றிருக்கிறது.
இந்த சிறுகோள் பென்னு, பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாகக் கருதப்பட்டாலும், அது பூமியில் இருந்து 4.65 மில்லியன் மைல்களுக்கு அருகில் வரக்கூடிய அபாயகரமான சிறுகோள் என நாசாவால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. பூமியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் மிக ஆபத்தான சிறுகோள்களில் பென்னும், 1950 டிஏ எனப்படும் மற்றொரு சிறுகோளும் இருப்பதாக நாசா விளக்கியிருக்கிறது.