மீன், மட்டன் உணவுப் பிரியர்களைவிட கருவாடு, உப்புக்கண்டம் விரும்புவோரின் நாக்கு இன்னும் சுள்ளென்று எதிர்பார்க்கும். அதிலும் கடல்புரத்துக் கருவாட்டுச் சமையல் நாசியையும் அடிமையாக்கிவிடும். இந்த வார வீக் எண்டுக்கு இதமான, மணமான, சுவையான கருவாட்டு சமையல் செய்து அசத்த ரெடியா?
கும்பலமாஸ்
தேவையானவை:
மாஸ் கருவாடு – 200 கிராம்
மிளகு – 10
துருவிய தேங்காய் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 10 (தோலுரிக்கவும்)
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மாஸ் கருவாட்டை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் உடைத்த துண்டுகளையும் முழு மிளகையும் சேர்த்து நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு அதைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இதனுடன் அரைத்த கருவாட்டு கலவை, தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து அவை அனைத்தும் நன்றாகக் கலக்கும்படி மிக்ஸியில் சிறிது நேரம் அரைத்தெடுத்தால் கும்பலமாஸ் ரெடி. இதை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சைடிஷாகவும் சாப்பிடலாம்.
நெத்திலி கருவாடு தொக்கு
தேவையானவை:
நெத்திலி கருவாடு – 100 கிராம் (சுத்தம் செய்யவும்)
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
தக்காளி – 2 (நறுக்கவும்)
மஞ்சள்தூள், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர் சிறிது எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். கறிவேப்பிலை, பூண்டு சேர்க்கவும். பின்னர் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிவைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் நன்கு கழுவி சுத்தம் செய்த கருவாட்டைச் சேர்த்துக்கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி சேர்த்து பக்குவமாகக் கலந்துவிடவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 15 நிமிடங்கள் வேக விடவும். வேகும்போது அடுப்பைக் குறைந்த தீயில் வைப்பது முக்கியம். நன்கு கொதித்து வந்த பின்னர் எண்ணெய் மேலாகப் பிரிந்து வரும். இந்தப் பக்குவத்தில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் கமகமவென கருவாடு தொக்கு தயார்.
கருவாடு சம்பல்
தேவையானவை:
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
நெத்திலி கருவாடு – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
புளி – 10 கிராம் (கரைத்துக்கொள்ளவும்).
செய்முறை:
நெத்திலி கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் நன்றாக வறுத்தெடுத்து அதை மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், தோலுரித்த சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் பொடி செய்த கருவாட்டோடு சேர்க்கவும்.
அத்துடன் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது அரைத்துக்கொள்ளவும். அதோடு புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்துக் கிளறினால் கருவாடு சம்பல் ரெடி.
மொழவு சோறு
தேவையானவை:
அரிசி – அரை கிலோ
துவரம்பருப்பு – 150 கிராம்
தக்காளி – 2
கத்திரிக்காய் – 2
உருளைக்கிழங்கு – 2
கேரட் – 2
மாங்காய் – 3 துண்டு
முருங்கைக்காய் – ஒன்று
புளி – 10 கிராம்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
மீன் மசாலா – 50 கிராம்
முருங்கைக்கீரை – 100 கிராம்
பாறைத்துண்டு கருவாடு – கால் கிலோ
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் – தாளிக்க தேவையான அளவு.
செய்முறை:
காய்கறிகளை நன்றாகச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அரிசி, பருப்போடு மஞ்சள்தூளையும் சேர்த்து, தேவையான நீர்விட்டு வேகவைக்கவும். சிறிது வெந்ததும் மஞ்சள்தூள், மீன் மசாலா மற்றும் புளிக் கரைசலை அதனோடு சேர்த்துக் கிளறவும். கருவாட்டுத் துண்டுகளை நன்றாகச் சுத்தம் செய்து அதோடு சேர்த்தபின் உதிர்த்த முருங்கைக்கீரை, உப்பு சேர்த்துக் கிளறவும்.
இவையனைத்தும் நன்றாக வெந்த பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து அதோடு சேர்த்து கிளறி எடுத்தால், சூடான மொழவு சோறு ரெடி.