பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ரூ.451 கோடி மதிப்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவிருக்கிறது. இந்த கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு, உத்தரப்பிரதேச அரசின் சார்பில் நிலத்துக்காக ரூ.121 கோடியும், கட்டுமான பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.330 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாக ரூ.451 கோடி மதிப்பில் உருவாகும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் ஒரே நேரத்தில் 30,000 பார்வையாளர்கள் போட்டியைக் காணலாம் என்றும், 2025-ம் ஆண்டு டிசம்பரில் இந்த மைதானம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வாரணாசியில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, “சிவபெருமானுக்கான நகரில் அமையவிருக்கும் இந்த மைதானம் சிவபெருமானுக்கே அர்ப்பணிக்கப்படும். ஒரு சிவசக்தி மையம் நிலவில் இருக்கிறது (நிலவில் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு பாஜக அரசு சூட்டிய பெயர்), மற்றொன்று இன்று வாரணாசியில் இருக்கிறது. இங்கு மைதானம் அமைத்தால், இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள். பூர்வாஞ்சல் பகுதியின் மிகப் பெரிய அடையாளமாக இந்த மைதானம் மாறும்.
விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு அமைக்கப்படும் போது, அது இளம் விளையாட்டு திறமையாளர்களை உருவாக்குவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கிறது. கிரிக்கெட் மூலம் மொத்த உலகமும் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. புதிய நாடுகள் இப்போது கிரிக்கெட் விளையாட முன்வருகின்றன” என்று கூறினார்.
முன்னதாக வெளியிடப்பட்ட கிரிக்கெட் மைதானத்தின் மாதிரி படங்களில், மைதானத்தின் முகப்பில் உடுக்கையும், திரிசூலம் வடிவில் மின்விளக்கு கம்பங்களும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.