டெல்லியின் மௌஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஜித் (36). இவருக்குத் திருமணமாகி 11, 7 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். டெல்லியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், சமீபகாலமாக அவருக்கு வேலையில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கு மத்தியில் வாக்குவாதம் தொடர்ந்திருக்கிறது. இதற்கிடையில், மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகித்திருக்கிறார் சஜித்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் சஜித் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிவாசிகள் சஜித் வீட்டுக்குள் சென்றபோது, சஜித்தின் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய போலீஸ் துணை கமிஷனர், “நள்ளிரவில் இந்தக் கத்திக்குத்து சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்திருக்கின்றனர்.
அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து, மார்பு, இடது கையில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. உடனே, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தக் கத்திக்குத்து சம்பவம் அவர்களின் குழந்தைகளின் கண்முன்னே நடந்திருக்கிறது. மூத்த மகள் சண்டையைத் தடுக்க முயன்றபோது, அவரின் கையிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட சஜித் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.