இரவு நேரங்களில் பெண்கள் ஆட்டோவில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். மும்பை அருகிலுள்ள டோம்பிவலியில் இரவு 10:45 மணிக்கு 25 வயது பெண் ஒருவர் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அந்நேரம் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை ஓட்டிய டிரைவர், `இது ஷேர் ஆட்டோ… எங்கு செல்ல வேண்டும்?’ என்று கேட்டு, அப்பெண் பயணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார்.
ஆட்டோவில் ஏற்கெனவே ஓர் ஆண் பயணி இருந்தார். ஆட்டோ ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றபோது, அப்பெண்ணை அவருடன் இருந்த மற்றொரு பயணி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அதோடு அப்பெண் இறங்க வேண்டிய இடம் வந்தபோது, அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டிச்சென்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதால் அப்பெண் சத்தம் போட்டு கத்த ஆரம்பித்தார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் போலீஸார் ரோந்து வந்தனர். பெண் ஆட்டோவில் இருந்து கத்துவதை கேட்டு அந்த ஆட்டோவை போலீஸார் பின் தொடர்ந்தனர். போலீஸார் பின் தொடர்வதை பார்த்த ஆட்டோ டிரைவரும் அதில் இருந்த நபரும் வண்டியில் இருந்த பெண்ணை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். போலீஸார் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்றனர். விரட்டிச் சென்ற போலீஸார் சம்பந்தப்பட்ட ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர்.
ஆட்டோவை ஓட்டியது பிரபாகர் பாட்டீல் (22) மற்றும் அதில் இருந்தவர் பெயர் வைபவ் (19) என்று தெரியவந்தது. இது குறித்து அவர்களை மடக்கி பிடித்த போலீஸ்காரர் அதுல் கூறுகையில், ”நாங்கள் ஆட்டோவை மடக்கிப் பிடித்தபோது, இரண்டு பேரில் ஒருவர் எங்களை ஸ்குரூடிரைவரால் தாக்கினார்.
இதில் எங்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அப்படி இருந்தும் அவர்களை மடக்கி பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து போலீஸாரை வரவழைத்தோம்” என்றார். இரண்டு பேரையும் மடக்கி பிடித்து கைதுசெய்த இரு போலீஸாரையும், மூத்த போலீஸ் அதிகாரிகள் கெளவித்தனர்.