டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தனது நண்பரின் 14 வயது மகளைப் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், போக்சோ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. இந்தப் புகார் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்,”பாதிக்கப்பட்ட சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரியும் நண்பர்கள். இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மரணித்திருக்கிறார்.
அதனால், அவரது நண்பரான மூத்த அதிகாரி அந்தச் சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, 2020 – 2021க்கு இடையில் பல முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது தொடரவே, ஒருகட்டத்தில் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். இதை வெளியில் கூறினால் ஆபத்து எனக்கருதிய அதிகாரி, தனது மனைவியிடம் தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, அதிகாரியின் மனைவி, தனது மகன் மூலம் கருக்கலைப்புக்கான மருந்து வாங்கிவரச் செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
அதனால், வீட்டிலேயே கருக்கலைப்பும் நடந்திருக்கிறது. இந்தத் தகவல்களை எல்லாம் சிறுமி விசாரணையின் போது தெரிவித்தார். விரைவில் நீதிமன்ற நீதிபதி முன்பு சிறுமி வாக்குமூலம் அளிப்பார். அதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும். தற்போது, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி, அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.