கேரள மாநிலம், மலப்புறத்தைச் சேர்ந்த சுமையா ஷெரின் என்ற இளம் பெண்ணும், ஹபீஃபா என்ற இளம் பெண்ணும் 12-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தபோது நெருங்கிய தோழிகள். பின்னர் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். இரண்டு வருடங்களாக காதலித்தவர்கள் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி தம்பதியாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே மகள் ஹபீஃபாவை காணவில்லை என கொண்டோட்டி காவல் நிலையத்தில் அவரின் தந்தை புகார் அளித்தார். பின்னர் சுமையா ஷெரினும், ஹபீஃபாவும் மலப்புறம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி தங்களுக்கு, 18 வயது கடந்து விட்டதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இருவரையும் சேர்ந்து வாழ கோர்ட் அனுமதித்த நிலையில், அவர்கள் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரியில் வசித்தனர். இதற்கிடையே கடந்த மாதம் 30-ம் தேதி ஹபீஃபாவை அவரின் பெற்றோர் கடத்திச் சென்றுவிட்டதாக கேரள ஐகோர்ட்டில், சுமையா ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் மீண்டும் இந்த விவகாரம் விவாதம் ஆனது.
கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி ஐகோர்ட்டில் ஆஜரான ஹபீஃபா தன் பெற்றோருடன் செல்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஹபீஃபா அவரின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இது சுமையாவுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் திடீரென ஹபீஃபா வீட்டைவிட்டு வெளியேறி மீண்டும் சுமையாவுடன் சேர்ந்து வாழத்தொடங்கினார். இதைத் தொடர்ந்து சுமையா ஷெரினும், ஹபீஃபாவும் ஐகோர்ட்டில் ஒரு மனு தக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும், ஹபிஃபாவை அவர் வீட்டினர் மீண்டும் கடத்திக் கொண்டு போவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கேரள ஐகோர்ட், இதில் மாநில அரசு மற்றும் பெற்றோரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கருத்துக் கேட்டிருந்தது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேஷனில் ஒன்றாக வாழும் இளம் பெண்களான சுமையா ஷெரினுக்கும், ஹபீஃபாவுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரளா ஐகோர்ட் நீதிபதி பி.வி குஞ்ஞிகிருஷ்ணன் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.