வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
மன்னிப்பு என்று ஆரம்பிக்கும் போதே ரமணா விஜயகாந்த் தான் ஞாபகத்துக்கு வருவார். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது அந்த வார்த்தை. ஏன் மன்னிப்பு எதற்காக மன்னிப்பு என்று சற்று விரிவாக பார்க்கலாம். தினசரி வாழ்கையில் நாம் அனைவரும் ஏதோ சில தவறுகளை செய்து விடுவோம்.
அதை சரி செய்ய முதலில் பயன்படுத்தும் வார்த்தை ‘மன்னிப்பு’ . நமது செயல்களால் ஏற்படும் தவறுகள் கால தாமதங்கள் இவை இரண்டிற்கும் முதலில் எல்லோரும் கேட்பது மன்னிப்பு. “தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப்பாக்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்…” வாலி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே பாடிவிட்டார்.
தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது தப்பு. தவறுகள் தொடர்ந்து வராமல் இருக்க ஒருவன் அதற்கான காரணத்தை கண்டுபிடுத்து தன்னை திருத்திக் கொள்ளவேண்டும்.
தெரிந்தே செய்யும் தப்புகளுக்கு ஒருநாள் நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த ரெண்டையும் சரி வர நிர்வாகம் செய்தாலே நம் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். அமைதியான வாழ்க்கைக்கு தடை கற்களாக இருப்பது இவை இரண்டுமே. அந்த தடைகற்களை படிக்கற்களாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது.
எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை உள்ளே வந்துவிடுகிறது. காதலும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு காதலி காதலனைப் பார்த்து ‘மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன், கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்…” என்று பாடுகிறாள். இதை எழுதியவரும் வாலி அவர்கள்தான்.
காதலனின் ஆசையை தூண்டுவதற்காக மன்னிப்பு கேட்கிறாள். மன்னிப்பு அங்கே மிக அழகாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கோவலன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டதும் சரியாக ஆராய்ந்து தீர்ப்பு சொல்லாமல் அவனுக்கு மரணதண்டனை விதித்து விடுகிறான் பாண்டிய மன்னன்.
தான் செய்தது தப்பு என்பதை உணரும் போது ‘யானோ அரசன்…யானே கள்வன்..” என்று சொல்லி உயிர் துறக்கிறான் மன்னன். கண்ணகியிடம் அவன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆவேசமாக வந்த கண்ணகி “தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று தொடங்கும் போதே தான் நீதி தவறிவிட்டதை உணர்ந்த மன்னன் செய்த தப்புக்கு வருந்தி உயிர் துறக்கிறான். மன்னிப்பு இங்கே இடம் பெறவில்லை.
அதே பாண்டிய நாட்டை சேர்ந்த இன்னொரு மன்னன் வீரனுக்கு (மதுரை வீரன்)கள்ளர்களுடன் தொடர்பு உள்ளது என்று யாரோ சிலர் சொன்னதை நம்பி மாறு கால் மாறு கை வாங்க உத்திரவிடுகிறான். அசரீரியாக வந்து இறைவி உண்மையை சொல்ல ஓடி வருகிறான் வீரனிடம் மன்னிப்பு கேட்கிறான். வீரன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மனைவிகளுடன் மேலுலகம் செல்கிறான்..இன்றுவரையில் காவல் தெய்வமாக போற்றி வழிபாடு செய்கிறார்கள் மக்கள்.
சொல்லும் செய்திகள் சரியாக காதில் விழவில்லை என்றால் படித்தவர்களில் சிலர் பாடன் (PARDON) என்று சொல்வார்கள். அது ஒரு நாகரீகமான முறை.
மன்னிப்பு கேட்பவர் எந்த தப்பும் தவறும் செய்யவில்லை. இருந்தாலும் மன்னிப்பு கேட்கிறார்கள். கல்லூரி பேராசிரியர்கள் பலர் இதை பயன்படுத்துவார்கள்.
‘மன்னிக்க மனமில்லை மன்னிக்க’ என்று பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஒரு நாவலை எழுதி உள்ளார். உங்கள மன்னிக்க மனமில்லை எனக்கு என்று ஒருவர் சொன்னால் மன்னிப்பு கேட்பவர் இமாலயத் தவறு செய்தவராக இருப்பார்.
அதிலும் பாருங்கள் ‘மன்னிக்க மனமில்லை மன்னிக்க’ மன்னிப்பு கொடுக்க தயாராக இல்லாதவர் எவ்வளவு அழகாக மன்னிப்பு கேட்கிறார்.
அங்கே இங்கே என்று தவறுகள் தப்புகள் நடக்கத்தான் செய்யும். மிகவும் கவனத்துடன்செயலாற்றி நாம் கடந்து செல்ல வேண்டும். ‘மன்னிப்பு கேட்பவன் மனிதன்…கொடுப்பவன் மாமனிதன்’ அடிக்கடி சொல்வார்கள். மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை உருவாகாமலே வாழ்க்கை நடத்துபவன் தான் மாமனிதன். இதை உணர்ந்து முடிந்த அளவு மாமனிதனாக அனைவரும் முயற்சி செய்யவேண்டும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.