இந்திய மில்லியனர்கள் நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற வெளிநாடுகளில் விலையுயர்ந்த வீடுகளை வாங்குவது அதிகரித்து வருகிறது. தற்போது இந்திய பில்லியனரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஓஸ்வால் உலகிலேயே மிக விலையுர்ந்த வில்லா ஒன்றை வாங்கி உள்ளனர்.
கோடீஸ்வர தம்பதிகளான பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வால் கடந்த பத்து வருடங்களாக தங்கள் இரு மகள்கள் வசுந்தரா மற்றும் ரிதியுடன் ஸ்விட்சர்லாந்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஸ்விட்சர்லாந்தின் கிங்கின்ஸ் கிராமத்தில் உள்ள 430,000 சதுர அடி கொண்ட வில்லாவை 200 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 1,649 கோடி) கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த வில்லாவிற்கு `வில்லா வரி’ (Villa Vari) எனப் பெயரிட்டுள்ளனர்.
1902-ல் சுவிஸ் நாட்டின் தொழிலதிபர் ஒருவர் இந்த வில்லாவைக் கட்டியிருக்கிறார். அதன்பின், கிரேக்க நாட்டை சேர்ந்த கப்பல் தொழிலதிபர் அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் என்பவருக்கு இந்த வில்லா சொந்தமாக இருந்துள்ளது.
சில வருடங்களாக வில்லாவை மறுசீரமைக்கும் பணியில் ஓஸ்வால் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஓபராய் ராஜ்விலாஸ் மற்றும் லீலா ஹோட்டல்கள் போன்றவற்றின் கட்டட வேலையில் நன்கு அனுபவமிக்க பிரபல கட்டிட வடிவமைப்பாளர் `ஜெஃப்ரி வில்க்ஸ்’-ஐ நியமித்து வில்லாவைப் புதுப்பிக்கும் பணியை ஒப்படைத்துள்ளார்.
தற்போது இந்த வில்லாவில் 12 படுக்கையறைகள், 17 குளியலறைகள், ஒரு நீச்சல் குளம், ஒரு டென்னிஸ் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் உள்ளது. அதோடு ஒரு ப்ரைவேட் சினிமா, வைன் பாட்டில்களைச் சேகரித்து வைக்கும் அறை (Wine Cellar) மற்றும் ஸ்பாவும் உள்ளது.
ஓஸ்வால் அக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனங்களை நிறுவிய மறைந்த அபய்குமார் ஓஸ்வாலின் மகன், பங்கஜ் ஓஸ்வால். பங்கஜ் ஓஸ்வாலினுடைய ஓஸ்வால் குரூப் குளோபல் பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கத் தொழிலில் பங்குகளைக் கொண்டுள்ளது.
இது தவிர்த்து, இந்தக் குடும்பத்தினருக்கு உலகம் முழுதும் ஆடம்பர வீடுகள், மாளிகை, தனியார் ஜெட், பயணத்திற்கான படகு, ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்றவையும் உள்ளன.